அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் வீட்டிலிருந்து படிக்கும் முறை 10 நாட்களுக்குக் கட்டாயமாக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து அதை இன்று முதல் தொடங்குமாறு தொடக்கப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக சிலர் அஞ்சுகின்றனர். வேறு சிலர், வீட்டிலிருந்து படிக்கும் முறை முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லது கட்டாய விடுப்பில் உள்ள மாணவர்களால் வகுப்புகளுக்குச் செல்ல வகைசெய்யும் எனக் கூறுகின்றனர்.
கல்வியமைச்சின் அறிவிப்பின்படி அடுத்த திங்கட்கிழமையன்று தொடங்கவிருக்கும் வீட்டிலிருந்து படிக்கும் முறை, தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நாளான அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
இது, தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும்.
இந்த ஏற்பாட்டினால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று வேறு சில பெற்றோர் ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
மெய்நிகராக நடத்தப்படும் வகுப்புகளில் கவனம் செலுத்த பிள்ளைகள் சிரமப்படுவதாக அவர்கள் கூறினர்.
வீட்டில் படிக்கவிருக்கும் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள தங்களுக்கும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஏற்பாட்டைச் செய்துதருமாறும் மற்ற பெற்றோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

