இளையர்களையும் முன்னோடித் தமிழ் மேடை நாடகக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூரின் தமிழ் மேடை நாடக வரலாற்றைக் கொண்டாடியது 'அவாண்ட்' நாடகக் குழு. அக்கால மேடை நாடக முன்னோடிகள், நாடகம் வழி நடிப்புத் திறனையும் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் எவ்வாறு நிலைநாட்டினர் என்பதை இளையர்கள் அறிந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 10 இளையர்கள், 27 நாடகக் கலை முன்னோடியினருடன் உரையாடி அவர்களது நாடகப் பயணத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஆராய்ந்து, சேகரித்த தகவல்களையும் அவர்களது கருத்துகளையும் ஸூம் வழி நடந்த சந்திப்பின்போது படைத்தனர்.
இந்த நிகழ்வில், இளையர்களின் படைப்புகளோடு சிங்கப்பூர் தமிழ் மேடை நாடகத் துறையின் வரலாறு, வெற்றி- தோல்வி, நடிப்பு உத்திகள் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரில் ஒரு சில தமிழ் நாடகக் குழுக்களே இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற முயற்சி களின் வாயிலாக இளைய தலைமுறையின் கவனத்தை மேடை நாடகம் பக்கம் திருப்ப முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இளையர்களில் ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப்பள்ளியின் உயர்நிலை ஐந்து மாணவர் ரகுநந்தனும் ஒருவர். இவர் சிங்கப்பூர் கவிமாலை மாணவரணியின் துணைத் தலைவர்.
"சிறந்த நடிகரும் முன்னோடிக் கலைஞருமான திரு குணசீலன் அவர்களின் மேடைக்கலை அனுபவத்தைப் பற்றி நேரில் சந்தித்து, உரையாடி, 43 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள், மறக்கமுடியாத சம்பவங்கள் என அவரது இத்தனை ஆண்டுகால கலைச்சேவையைப் பற்றி நான் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
"பல ஆண்டுகளாக நம்மை மேடை, வானொலி, தொலைக்காட்சி என அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் மகிழ்வித்து வரும் முன்னோடி மேடை நாடகக் கலைஞர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் கலைப்பணியைப் போற்றும் இம்முயற்சியில் என்னைப்போன்ற இளையர்கள் பங்கேற்று அவர்களுக்கு நன்றியுரைத்தது என் மனதில் இடம்பிடித்தது," என்றார் அவர்.
நாடக முன்னோடியான திருமதி சித்திராவை பேட்டி கண்டு நிகழ்ச்சி படைத்த இளையர் கீர்த்திகா ரத்னா, 23, தமிழ் மேடை நாடகங்களைப் பார்த்திருந்தாலும் ஒரு மேடை நாடகப் பின்னணியில் நடப்பவற்றைப் பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்துகொண்டதாகக் கூறினார். முன்னோடிகளின் கலைப் பற்றும் மனஉறுதியும் இளையர்களை நெகிழ வைக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

