தொற்று கூடிவரும் நிலையில் விரைவுப் பரிசோதனை கருவிக்குத் தேவை அதிகரிப்பு
கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி தேவையான அளவுக்குப் பல கடைகளிலும் இருப்பு இல்லை என்று தெரிகிறது.
சில மருந்துக் கடைகளிலும் சில்லறை வர்த்தகக் கடைகளிலும் அது விற்றுத் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று கூடி வரும் சூழலில் அத்தகைய விரைவுப் பரிசோதனைக் கருவிக்கு தேவை அதிகரித்துள்ளது.
தோ பாயோ சென்ட்ரல், விவோசிட்டி, புக்கிட் பாஞ்சாங் ஆகிய பகுதிகளில் செயல்படும் குறைந்தபட்சம் ஆறு சில்லறை வர்த்தகக் கடைகளில் அந்தக் கருவிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதைக் காண முடிந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்றுக் குறிப்பிட்டது.
தனிநபர்களும் நிறுவனங்களும் அத்தகைய சாதனங்களை அண்மைய வாரங்களில் அதிகம் வாங்குவதால் அவற்றுக்கான தேவை ஏறத்தாழ ஐந்து மடங்கு கூடியிருப்பதாக வாட்சன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
"பொதுவாகப் பார்க்கையில் சந்தையில் குறிப்பிட்ட அளவுக்குத்தான் அந்தக் கருவி கிடைக்கிறது.
"வரவர அவை வேகமாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன," என்று அந்தப் பேச்சாளர் கூறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
வேறு நிறுவனங்களிடம் இருந்து விரைவுப் பரிசோதனைக் கருவியைப் பெறுவதற்கு வாட்சன்ஸ் முயன்று வருவதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் அந்தக் கருவிக்கான தேவை இரண்டு மடங்கிற்கும் மேலாக கூடிவிட்டது என்று என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சமூகத்தில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் இத்தகைய சுயபரிசோதனைக் கருவியைப் பற்றிய புரிந்துணர்வு மக்களிடையே அதிகமாக இருக்கிறது. இதுவே அதிக விற்பனைக்கு காரணம் என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.
ஃபேர்பிரைஸ் நிறுவனம் சுகாதார அறிவியல் ஆணையத்துடன் சேர்ந்து போதிய கருவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வேளையில், பயம் காரண மாக அந்தக் கருவியை அவசர அவசரமாக வாங்க வேண்டியதற்கான காரணம் எதுவும் இல்லை என்றும் உள்ளூரில் போதிய அளவுக்கு இருப்பு இருப்பதாகவும் விநியோகிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சிங்கப்பூரில் பல்வேறு குடியிருப்புப் பேட்டைகளில் 56 இடங்களில் இத்தகைய கருவியைப் பெறுவதற்கான 100 இயந்திரங் களைத் தான் அமைத்து இருப்பதாக சுகாதார அமைச்சு சென்ற வாரம் தெரிவித்தது.
இந்தக் கருவியைக் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 27 வரை அரசாங்கம் பரவலாகக் கொடுத்து வருகிறது.
பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் இது விநியோகிக்கப்படுகிறது. கட்டாய பரிசோதனைக்கு உட்படாத துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இவை கொடுக்கப்படுகின்றன.

