கொல்லப்பட்ட மீன்களுக்குப் பதிலாக வளர்க்கப்பட்ட மீன் உயிரணுக்களால் தயார்செய்யப்பட்ட மீன் உணவு வகைகள் விரைவில் சிங்கப்பூரில் விற்கப்படலாம். அதற்கு வகைசெய்யக்கூடிய மீன் உயிரணு உற்பத்தி வசதியை சீன நிறுவனமான அவான்ட் அடுத்த ஆண்டிற்குள் சிங்கப்பூரில் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்தகைய மீன் உயிரணு உற்பத்தி வசதி சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது இதுவே முதல் முறை. அவான்ட் நிறுவனத்தின் ஓர் ஆய்வுக் கூடம், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் ஒரு பயிற்சிக் கழகம் ஆகியவற்றுடன் இந்த வசதி இணைந்து திறக்கப்படும். மீன் உயிரணு உற்பத்திக்கான இந்தக் கூட்டு ஆய்வுக் கூடம் போனா விஸ்தாவில் உள்ள 'பயோபொலிஸ்' கட்டடத்தில் அமைந்திருக்கும். அது, சிங்கப்பூரின் உயிரியல் துறை மையப் பகுதி. வளர்க்கப்பட்ட மீன் உயிரணுக்களைக் கூடுதலாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் தீர்வுகளைக் கூடத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் ஆராயும் என்று அவான்ட், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு இரண்டும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட மீன் உயிரணுக்களால் 'ஃபிஷ் ஃபிலே' போன்ற உணவு வகைகளை அவான்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
உயிரணுக்களால் கோழி இறைச்சியைத் தயாரிக்கும் உலகின் முதல் வர்த்தக வசதி அண்மையில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டது. அது, அயர் ராஜா கிரசெண்ட்டில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவான்ட் நிறுவனம், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உயிரணுக்களால் இறைச்சியை உருவாக்கும் நிறுவனங்கள் அதற்கென சிங்கப்பூர் உணவு அமைப்பிடமிருந்து தனிப்பட்ட உரிமம் பெற்றிருக்கவேண்டும். இந்நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அமைப்பு சோதனையிட்ட பிறகே அவற்றை விற்க அனுமதி வழங்கப்படும்.

