தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணப் பாதையின்கீழ் முதல்முறையாக சிங்கப்பூரைச் சேர்ந்த உல்லாசப் பயணக் குழு ஜெர்மனிக்குச் செல்லவிருக்கிறது.
குழு, நாளை அதிகாலை 12.45 மணிக்கு ஜெர்மனிக்குக் கிளம்பும். 'இயு ஹோலிடேஸ்' நிறுவனம் இந்த 12 நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
குழுவினர் மியூனிக்கில் தொடங்கி ஸ்டுட்கார்ட், ஃபிராங்ஃபர்ட் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்வர்.
குழுவில் சுமார் 20லிருந்து 70 வயதுக்கு உட்பட்டோர் உள்ளனர். கொவிட்-19 'ஏஆர்டி' சோதனைக் கருவிகளைக் கைவசம் வைத்திருப்பது, பாதுகாப்பு தூர இடைவெளியைப் பின்பற்ற வகைசெய்ய 40 இருக்கைகளைக் கொண்ட பேருந்தைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக 'இயு ஹோலிடேஸ்' நிறுவனத்தின் இயக்குநர் திரு வோங் இயூ ஹூங் தெரிவித்தார்.
குழுவினர் எல்லா வேளைகளிலும் முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும், அனைவருக்கும் உணவு தனித்தனியாக வழங்கப்படும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணப் பாதையின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமின்றி ஜெர்மனிக்குச் சென்றுவரலாம்.
அதற்குப் பதிலாக அவர்கள் சுமார் நான்கு முறை கொவிட்-19 சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
மற்ற சில சுற்றுலா நிறுவனங்களும் இத்தகைய உல்லாசப் பயணத் திட்டங்களை உருவாக்கி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

