கடந்த 33 ஆண்டுகளாக நாளிதழாக இருந்துவந்துள்ள 'தி நியூ பேப்பர்' வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதியிலிருந்து முழுமையாக மின்னிலக்கமயமாகவுள்ளது.
இந்தத் தேதிக்குப் பின்னர் 'தி நியூ பேப்பர்' தாள் வடிவில் நாளிதழாக அச்சடிக்கப்படாது. செய்தியறைகள் மின்னிலக்கமயமாவதைத் துரிதப்படுத்தவும் வாசகர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யவும் 'எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்' ஊடக நிறுவனம் எடுக்கும் முயற்சிகளில் இந்த நடவடிக்கை அடங்கும்.
'தி நியூ பேப்பர்' முழுமையாக மின்னிலக்கமயமாகும்போது அதன் மூலம் வாசகர்களை மேலும் திருப்திப்படுத்தமுடியும் என்றார் 'எஸ்பிஹெச் மீடியா ட்ரஸ்ட்' நிறுவனத்தின் தலைவர் திரு கோ பூன் வான். 'தி சண்டே டைம்ஸ்' நாளிதழுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு சொன்னார்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 'சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் ஊடகப் பிரிவை 'எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்' ஏற்று நடத்தும்.
1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'தி நியூ பேப்பர்', 2016ஆம் ஆண்டில் இலவச நாளிதழாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த நாளிதழ் 45 பெருவிரைவு ரயில் நிலையங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. அடுத்த மாதம் 25ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்பட்ட நியூ பேப்பரின் இணையத்தளம் செயல்படத் தொடங்கும்.

