தனியார் வாடகை காரில் தமது பணப்பையை வைத்துவிட்டு இறங்கிவிட்டோம் என்பதே தெரியாமல் மாது ஒருவர் தமது வேலையிடத்திற்குச் சென்றுவிட்டார்.
அவரது ஓட்டுநர் அவரது வேலையிடத்திற்கு வந்து பணப்பையை ஒப்படைத்தவுடன்தான் அதுபற்றி அந்த மாதின் கவனத்திற்கு வந்தது.
தேபான் கார்டன்சிலிருந்து புக்கிட் பாத்தோக்கிற்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 20) காலை 7.30 மணியளவில் அந்த மாது கோஜெக் பயணம் மேற்கொண்டார்.
“எனது கைப்பையிலிருந்து எனது பணப்பை நழுவி காரில் விட்டுச்சென்றதை நான் கவனிக்கவில்லை.
“இரண்டு மணி நேரம் கழித்து, எனது பணப்பையை என்னிடம் ஒப்படைக்க ஓட்டுநர் ஒருவர் வேலையிட நுழைவாயிலுக்கு வந்ததாக எனது சக பணியாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.
“எனது பணப்பையைத் திருப்பி ஒப்படைப்பதற்காக எனது வேலையிடம் வரை அந்த ஓட்டுநர் வந்தார்! பணப்பையை அவரிடமிருந்து பெற்றக்கொண்டவுடன் அவரது நல்லுள்ளத்திற்காக அவரிடம் நன்றி கூறினேன்.
“அவரது நற்செயலுக்காக வெகுமதி அளிக்கவும் விரும்பினேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் திடமாக மறுத்துவிட்டார். வேறொரு பயணி பணப்பையைக் கண்டறிந்து அதைத் தம்மிடம் கொடுத்ததாக அந்த ஓட்டுநர் கூறினார்.
“அவரது நல்ல மனதிற்கு திரு லோ செக் தியென் எனும் அந்த ஓட்டுநரிடம் நான் மனதார நன்றி கூற விரும்புகிறேன்.
“கோஜெக் நிறுவனத்திடம் இதுகுறித்து கருத்து சமர்ப்பித்துள்ளேன். அவருக்கும் அவரைப்போன்ற நற்செயல் புரியும் ஓட்டுநர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என நம்புகிறேன்,” என்று அந்த மாது நன்றியுடன் கூறினார்.
(இந்தச் செய்தி ஸ்டோம்ப் இணையப் பக்கத்தில் முதலில் வெளிவந்தது)