ஆரம்பகால பாலர் பருவ மேம்பாட்டு வாரியத்திடம் 2016ஆம் ஆண்டில் போலி மானியக் கோரிக்கைகளைப் பலமுறை சமர்ப்பித்ததன் தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு மோசடி குற்றச்சாட்டுகளை 53 வயது அருளாநாதம் ராஜேஸ்வரி ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது செயல்பாட்டில் இல்லாத 'ஃபேத் எடுகேர்' குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கு அவர் பள்ளி முதல்வராக இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், அவர் துணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.
நிலையங்களின் இயக்குநராக இருந்த ஜோசஃபின் டான் போ சூ, இரண்டு நிலையங்களுக்கு முதல்வராக இருந்த ஃபாத்திமா பீவி முகம்மது ஷரிஃப் ஆகியோருடன் ராஜேஸ்வரி சேர்ந்து போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததை அடுத்து வாரியம் கிட்டத்தட்ட $5,000 குழந்தைப் பராமரிப்பு மானியத் தொகையை வழங்கி இருந்தது.
இதற்கிடையே, அமைப்பை ஏமாற்றியதன் மூலம் ராஜேஸ்வரிக்கு எவ்வித நேரடிப் பலனும் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.


