'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் 140,000 மூத்த குடிமக்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோருக்கு இனி வாரந்தோறும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள், 60 வயதைத் தாண்டியவர்கள் என்று அமைச்சு குறிப்பிட்டது. எல்லா தடுப்பூசி நிலையங்கள், பலதுறை மருந்தகங்கள், 'பிஹெச்பிசி' எனப்படும் பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் ஆகியவற்றில் மூத்த குடிமக்கள் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அமைச்சு சொன்னது.
'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அமைச்சு சுட்டியது. அவ்வாறு செய்யாமல் நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சிங்கப்பூரின் தேசிய 'பூஸ்டர்' தடுப்பூசித் திட்டம் இம்மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கியது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள் முதலில் 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெறுவர்.
'பூஸ்டர்' தடுப்பூசி போட தேவைக்கும் அதிகமான தடுப்பூசி போடும் நிலையங்களும் இடங்களும் இருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் பொதுமக்களுக்கு உத்தரவாதம் தந்தார்.