மார்சிலிங் லேன் உணவங்காடி, ஈரச்சந்தை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் குழுமமாக உருவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து புளோக் 20, 21 ஆகியவற்றில் இருக்கும் இந்த உணவங்காடியும் ஈரச்சந்தையும் நேற்று மூடப்பட்டன.
நாளை மறுதினம் வரை மூடப்பட்டிருக்கும் என்று மார்சிலிங்- யூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
அப்போது இங்கு சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தற்காப்பு, மனிதவளம் ஆகிய துறைகளுக்கான மூத்த துணை அமைச்சருமான திரு ஸக்கி கூறினார்.
ஈரச்சந்தையிலும் உணவங்காடியிலும் 52 உணவுக் கடைகள், 71 இறைச்சிக் கடைகள், 34 காய்கறிக் கடைகள் உள்ளிட்டவை இருப்பதாக அவர் சொன்னார்.
இங்கு கடைக்காரர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கிடையே கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்ததாக தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியது.
'சுத்திகரிப்புப் பணிகள் நேற்று மதியம் சுமார் மூன்று மணிக்குத் தொடங்கியதாக அமைப்பு குறிப்பிட்டது. இது நான்கு நாட்களில் மூடப்பட்டிருக்கும் மூன்றாவது ஈரச்சந்தை மற்றும் உணவகம். கடந்த சனிக்கிழமையன்று தோ பாயோ லோரோங் எட்டு ஈரச்சந்தையும் உணவங்காடியும் மூடப்பட்டன.
அதற்கு மறுநாள் வெஸ்ட் கோஸ்ட்டில் உள்ள ஆயர் ராஜா உணவங்காடி மூடப்பட்டது. இரண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று குழுமங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

