வேலையிடத்தில் யாருக்காவது கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் உடனடியாக வீட்டிலிருந்து வேலை பார்க்கவேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டதைப் பொதுவாக சிங்கப்பூர் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
தளர்த்தப்பட்ட விதிமுறைகளால் வேலையிட செயல்முறைகளுக்குப் பாதிப்பு அதிகம் வராது என்று அவை கருதுகின்றன.
வேலையிடத்தில் ஏழு நாட்களுக்குள் குறைந்தது மூன்று ஊழியர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டால் அனைவரும் உடனடியாக 10 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கவேண்டும்.
இந்தக் கால அவகாசம் இதற்கு முன் 14 நாட்களாக இருந்தது. மேலும், இதற்கு முன் வேலையிடத்தில் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டாலே இந்த விதிமுறை நடப்புக்கு வந்திருக்கும்.
தளர்த்தப்பட்ட விதிமறைகள் நேற்று நடப்புக்கு வந்தன. மாற்றங்கள் வர்த்தகங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றார் 'ப்ருடென்ஷியல் சிங்கப்பூர்' நிறுவனத்தின் நிறுவன விவகாரங்கள் பிரிவுத் தலைவர் டான் பிங் பிங் கூறினார்.
விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது சரியான பாதையில் செல்வதைக் காட்டுவதாகச் சொன்ன செடிகொடிகளிலிருந்து உணவைத் தயாரிக்கும் நிறுவனமான 'கரானா'வின் துணை நிறுவனரான பிளேயர் கிரிஹ்டன் கூறினார்.
விதிமுறைகள் எப்படி தளர்த்தப்பட்டாலும் அது வரவேற்கப்படும் என்று அவர் கூறினார்.
இவற்றைப் போல் இதர சில நிறுவனங்களும் தளர்த்தப்பட்ட விதிமுறைகளை எண்ணி மகிழ்ச்சியடைகின்றன.
இந்த விதிமுறைகள் சராசரியான வேலையிடங்களுக்குப் பொருந்தும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
கட்டுமானத் துறை, கடற்துறை போன்றவை, அவற்றுக்கென இருக்கும் கிருமிப் பரவல் தொடர்பிலான விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றவேண்டும் என்று அமைச்சு சொன்னது.

