பிரபல 'நாசி படாங்' உணவு வகையை விற்கும் 'ஹெச்ஜேஹெச் மைமுனா' உணவகம் தற்காலிகமாக அதன் கிளைகளை மூடியுள்ளது. அதன் கிளைகளில் ஒன்றில் கொவிட்-19 தொடர்பான சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அவ்வுணகக் கிளைகள் மூடப்பட்டுள்ளன.
உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும் நாள் குறித்து அறிவிக்கும் வரை அவை மூடப்பட்டிருக்கும் என்று 'ஹெச்ஜேஹெச் மைமுனா' ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு 'ஹெச்ஜேஹெச் மைமுனா' உணவகங்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு அவற்றில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் உணவகங்களுக்கு வந்தோரிடம் தங்களின் உடல்நலனைக் கூர்ந்து கவனிக்குமாறும் 'ஹெச்ஜேஹெச் மைமுனா' ஃபேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டது. உணவை வாங்க முன்பணம் செலுத்தியவர்களுக்கு அந்தத் தொகை திரும்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதற்கு 'ஹெச்ஜேஹெச் மைமுனா' வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

