நினைவிழப்பு நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் புதிய இணையவாசலும் செயலியும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தேவையான வளங்களைப் புதிய இணைய
வாசல் கொண்டிருக்கும்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி, ஒருவருக்கு நினைவிழப்பு நோய் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போதே அறிகுறிகளை அடையாளம் காண உதவும்.
உலக அல்ஸைமர் நோய் தினத்தை முன்னிட்டு நினைவிழப்பு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருமாதக் காலத்துக்கு நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
DementiaHub.SG இணைய
வாசலை சிங்கப்பூர் நினைவிழப்பு நோய் சமூகச் சேவை அமைப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவையும் தொடங்கிவைத்துள்ளன.
சமூகத்தினர் அல்லது நிறு
வனங்களைச் சேர்ந்தவர்கள், நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோர், நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோரைப் பராமரிப்பவர்கள்,
பராமரிப்புச் சேவை நிபுணர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்குத் தேவையான வளங்களை இந்த இணையவாசல் கொண்டுள்ளது.
நினைவிழப்பு நோய்க்கான அறிகுறிகளைச் சமாளிப்பது, பொருட்கள் மற்றும் ஆதரவுச் சேவைகள், சுயபராமரிப்பு ஆகியவை தொடர்பான அறிக்கைகளையும் நினைவிழப்பு நோயாளிகள் பராமரிப்பு தொடர்பான காணொளிகள், உணவுப் பரிந்துரைகள் ஆகியவற்றை இணையவாசல் கொண்டுள்ளது.
ஒருவருக்கு நினைவிழப்பு நோய் இருப்பது தெரியவந்ததும் அது
தொடர்பாகக் கூடுதல் தகவல்
களைப் பெற பாதிக்கப்பட்டோரும் அவர்களைப் பராமரிப்பவர்களும் விரைவது வழக்கம் என்று சிங்கப்பூர் நினைவிழப்பு சமூகச் சேவை அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேசன் ஃபூ தெரிவித்தார்.
பல்வேறு உள்ளூர், அனைத்துலக இணையத்தளங்களில் அவர்கள் தகவல்களைத் தேடுவர் என்று அவர் கூறினார்.
ஆனால் சில இணையத்தளங்களில் உள்ள தகவல்கள் நம்பகமானவை அல்ல அல்லது சிங்கப்பூர் சூழலுக்குப் பொருத்தமானவை அல்ல என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் பத்தில் ஒரு
வருக்கு, அதாவது ஏறத்தாழ 86,000 பேருக்கு நினைவிழப்பு நோய் இருக்கக்கூடும் என்று ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவையின் தலைமை நிர்வாகி டான் குவாங் சியேக் கூறினார்.
புதிய இணையவாசல் வருங்காலங்களில் மேம்படுத்தப்படும் என்றும் சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளிலும் தகவல்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிழப்பு நோய்க்கான அறிகுறிகளை அடையாளம் கண்டு நோய் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போதே அதைக் கண்டுபிடிக்க உதவும் செயலியை தேசிய நரம்பியல் கழகமும் சிங்ஹெல்த்தும் அறிமுகப்படுத்தியுள்ளன.
ஒன்பது மாதச் சோதனைக்குப் பிறகு புதிய செயலி சிங்ஹெல்த்தின் 'ஹெல்த் படி' கைபேசிச் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

