அனைத்துலக கடல்துறை, வர்த்தக மையமாக சிங்கப்பூர் தொடர்ந்து விளங்குவதற்கு அது கையாளும் சரக்கின் அளவு மட்டும் முக்கியமல்ல; அதன் துறைமுகம் வழி எவ்வாறு செயல்திறத்துடன் சரக்குகளைக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தும் உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு தொடர்ந்து ஒரு முக்கிய அம்சமாக உள்ளது என்று கூறினார் அவர். பிரம்மாண்டமாக உருவாகிவரும் துவாஸ் துறைமுகம், அதன் முதல் இரண்டு கப்பல் நிறுத்துமிடங்களை ஆண்டு இறுதிக்குள் திறக்கவுள்ளது. அது தற்போதைய சரக்குகளையும் புதிதாக வரக்கூடிய சரக்குகளையும் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
இருப்பினும், இதையும் தாண்டி நெருக்குதல்கள் ஏற்பட்டால் அவற்றை மின்னிலக்கமயம் கொண்டு குறைக்கவும் நீடித்த நிலைத்தன்மை குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும் என்றார்.
மூன்று நாள் 'சீ ஏஷியா' மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
"கப்பல் வணிகத்தில் இருந்தாலோ துறைமுகச் செயல்பாட்டில் இருந்தாலோ, நீடித்த நிலைத்தன்மை குறித்து நாம் வெளிப்படையாகத் தீர்வுகாண வேண்டும். ஏனெனில், அது செலவுகளைப் பற்றியது மட்டும் அல்ல; போட்டித்தன்மையைப் பற்றியதும்கூட," என்றார் அவர்.
அனைத்துலக தொடர் விநியோகமும் வர்த்தகங்கள் செயல்படும் முறையும் கொவிட்-19 சூழலால் தடைபட்டாலும் தொடர்ந்து சரக்கு விநியோகம் நடைபெறுவது அவசியம் என்று சுட்டினார் திரு ஈஸ்வரன்.
செலவு, எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை போன்ற சவால்களுக்கு இடையே, நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருள் குறித்துக் கடல்துறையினர் முயற்சிகள் மேற்கொள்வது பற்றியும் அமைச்சர் கூறினார்.
"அனைத்துலக அளவில் பொதுவாக நிலவும் சவால் இது. இதற்கு அனைத்துலக அளவில் பொதுவான ஒரு தீர்வு தேவை," என்றார்.
தீர்வு காண்பதற்காக நாடுகள் ஆலோசனை அமர்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் தொழில்துறையை ஈடுபடுத்த வேண்டும் என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
வர்த்தகர்களும் வர்த்தகத் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய ஓர் அம்சம் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
"வர்த்தகம், மின்னிலக்கமயம், கரியமிலமின்மை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் வர்த்தகர்களுக்கும் வர்த்தகத் தலைவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அறிந்திருப்பது முக்கியம்," என்றார் அவர்.

