சிங்கப்பூரின் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளுக்கான ஆராய்ச்சியை வலுப்படுத்த, அடுத்த ஐந்தாண்டுகளுக்கென மொத்தம் $457 மில்லியன் ஒதுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இத்தொகை, 2015 நிதியாண்டுமுதல் 2020 நிதியாண்டுவரை ஒதுக்கப்பட்ட $350 மில்லியனைக் காட்டிலும் 30% அதிகரிப்பாகும்.
சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் (எஸ்எஸ்ஆர்சி) முக்கிய திட்டங்களுக்கு ஆதரவு நல்கும் வகையில் இந்த அதிகரிக்கப்பட்ட தொகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் தொகை ஒதுக்கப் படுவதால் நம்பிக்கைக்குரிய வாழ்க்கைத்தொழில்களை மேற்கொண்டுள்ள இளம் உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு மேம்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். மேலும், சிங்கப்பூரில் துடிப்புமிக்க ஒரு சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி சூழலை வளர்க்கும் முயற்சிக்கும் இது கைகொடுக்கும் என்றார் அவர். தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் அனைத்துலக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

