தொடர்புத்திறன் குறைபாடு, மிதமான அறிவுசார் குறைபாடு, வலிப்பு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 36 வயது ஆடவரை, பெரியவர்களுக்கான இல்லப் பணியாளர் ஒருவர் தாக்கியதாக நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த 29 வயது இந்திய நாட்டவர், பெரியோர்க்கான இல்லத்தில் பராமரிப்புப் பணியாளராக வேலை அனுமதிச் சீட்டு வைத்திருந்தார். தாக்கப்பட்டவர், 2019ஆம் ஆண்டுமுதல் அந்த இல்லத்தில் இருந்து வந்தவர். அவருக்கு வாரந்தோறும் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது. 2019 முதல் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இல்லவாசியைப் பராமரித்து வந்தார்.
இல்லத்தின் நடவடிக்கை மையத்தில் இருந்த ஊழியரை நோக்கி வந்த இல்லவாசி, அவரது சட்டைப்பட்டையைப் பிடித்ததாகவும் அதன் பின்னர் இல்லவாசியை அந்த ஊழியர் தரைக்குத் தள்ளியதாகவும் அறியப்படுகிறது.
அத்துடன் இல்லவாசியின் கைகளைப் பிடித்தவாறு தனது முழங்காலையும் இல்லவாசியின் வயிற்றின் மீது அழுத்தினார். பின்னர், எழுந்து நின்று இல்லவாசியின் வயிற்றில் மிதித்தார். அறை நடுவுக்கு இல்லவாசியைக் கையைப் பிடித்து இழுத்ததுடன் அவரது தொடைப்பகுதியில் ஐந்து முறை உதைத்தார்.
அதே நாளில் இரண்டாவது முறையும் இல்லவாசியை அந்தப் பணியாளர் தாக்கினார். மற்ற இல்லப் பணியாளர்கள் நடப்பதைப் பார்த்தும் தாக்குதலை நிறுத்தவில்லை. தாக்கப்பட்ட இல்லவாசி வீடு திரும்பியபோது இடுப்பிலிருந்து தொடைவரை இருந்த காயத்தை அவரின் தாயார் கவனித்துவிட்டார். இல்லப் பணியாளரது தண்டனை விதிப்பு அடுத்த மாதம் 28ஆம் தேதியன்று தெரிவிக்கப்படும்.

