சாங்கி விமான நிலையத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 22) நிகழ்ந்த விபத்து ஒன்றில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கிக்கொண்டார்.
அந்த வழியாகச் செல்லும் ‘ஸ்கைட்ரைன்’ பாதையில் உள்ள தூண்மீது எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து மோதியதாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த 59 வயது பேருந்து ஓட்டுநர், 34, 42 வயதில் இரு பயணிகள் சாங்கி பொது மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாங்கி விமான நிலையம் முனையம் 3க்கும் 1க்கும் இடையே எண் 65 ஏர்போர்ட் பொலிவார்ட்டில் பிற்பகல் 1.05 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
“பேருந்து ஓட்டுநரின் இருக்கையில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் கண்டறியப்பட்டார். மீட்புக் கருவிகளை கொண்டு அந்த நபர் மீட்கப்பட்டார்,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பேருந்து ஓட்டுநர்தான் இருக்கையில் சிக்கிக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விபத்து குறித்த விசாரணை நடைபெறுகிறது.