தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானத்துக்கு பலமுறை அழைத்தும் வராததால் அவரைக் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக கணவர் மிரட்டியிருக்கிறார். தன்னையும் மாய்த்துக்கொள்வதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.
தற்போது 40 வயதாகும் முருகன் நண்டோ, "எனக்குக் கிடைக்காத மனைவியை வேறு யாருக்கும் கிடைக்கவிட மாட்டேன் என்று நண்பரிடம் கூறியிருக்கிறார்.
2019 ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்றபோது போலிசார் அவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட அவரது மனைவியான 40 வயது கிருஷ்ணவேணி சுப்ரமணியத்தையும் போலிசார் மீட்டனர்.
அந்தச் சமயத்தில் மலேசிய தம்பதியர் ஜோகூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமதி கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் முன்கூட்டியே கணவரின் திட்டத்தை போலிசுக்குத் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன் தன் மீது சுமத்தப்பட்ட கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

