சிங்கப்பூரில் ஃபைசர், மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அரிதாக ஏற்படும் இந்த ரத்த உறைவு, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் போட்டுக்கொள்ளாவிட்டாலும் மூளையின் நரம்புகளில் இயற்கையாக ஏற்படக்கூடிய ஒன்று. பரம்பரையாக ரத்த உறைவுக் கோளாறு இருப்பது, தலையில் பலத்த அடிபடுவது, கருத்தடை மருந்துகள் உட்கொள்வது, ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை மருந்து உட்கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த உறைவு ஏற்படலாம்.
ரத்த உறைவு 100,000 மக்களிடையே 1.3லிருந்து 2 பேருக்குக் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்று சுகாதார அறிவியல் ஆணையம் அதன் கொவிட்-19 பாதுகாப்பு தகவலில் தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவோரில் எவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்பதையும் ஆணையம் குறிப்பிட்டது. மேலும் ரத்த உறைவு ஏற்படுவதற்கும் மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்புள்ளதை உறுதிப்படுத்த இயலாது என்றும் ஆணையம் கூறியது. இது தொடர்பான நிகழ்வுகளை ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதுமட்டுமின்றி மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இதுவரை உறுதிப்படுத்த வில்லை. இருப்பினும் உள்ளூர் சுகாதாரத் துறை நிபுணர்களுடன் இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் ஆணையம் கூறியது.

