பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் நேற்று தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர்களில் பலர், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கிருமி பெரிய அளவில் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அண்மையில் எட்டு பேருந்து நிலையங்களுடன் தொடர்புள்ள கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டன. அதனையடுத்து முன்களப் பணியாளர்களான பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய தொற்றுக் குழுமமாக தோ பாயோ பேருந்து நிலையம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் திங்கட்கிழமை வரை 254 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தொற்று பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாகக் குணமடைந்து இந்த வாரம் மீண்டும் பணிக்குத் திரும்பிய பேருந்து ஓட்டுநர்கள் சிலரை திரு யோங் சந்தித்துப் பேசியதாகவும், மேலும் ஓட்டுநர்கள் பலர் குணமடைந்து பணிக்குத் திரும்புவதாகவும் கூறினார்.
எனவே, பேருந்து நிலையங்களில் இருந்துவந்த மனிதவளப் பற்றாக்குறை சற்று மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் பேருந்து நிலையங்களில் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக பணியைத் தொடர்வர்.
முத்தரப்பு கூட்டு முயற்சியால் பணியிடங்களில் வழக்கமான தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றுப் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தி தொற்று பலருக்கும் பரவாமல் தடுக்கலாம் என்று திரு இயோங் அறிவுறுத்தினார்.
பேருந்து ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கு முன்னர், சிலர் தங்களுக்கு இலேசான அறிகுறியிருந்ததாகவும் சிலர் எவ்வித அறிகுறியுமே இல்லையெனவும் தெரிவித்ததாகக் கூறினார்.
பேருந்து நிலையங்கள் தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பயணிகள், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தொற்று பரவலால் 'கோ-அஹெட் சிங்கப்பூர்' பேருந்து நிறுவனம் செப்டம்பர் 15ஆம் தேதி, தனது ஐந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதுபோன்று பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டதால் பேருந்துக்கான காத்திருப்பு நேரமும் கூடியது.
இருப்பினும், பயணிகள் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஓட்டுநர்களின் சேவையைப் பாராட்டத் தவறவில்லை என்று ஓட்டுநர்கள் சிலர் தம்மிடம் கூறியதாக திரு இயோங் தெரிவித்தார். மேலும், அவர் முன்களப் பணியாளர்களான பேருந்து ஓட்டுநர்களுக்குப் பொதுமக்களின் ஆதரவு மிகவும் முக்கியம்.
அந்த வகையில், தொற்று நோய்க்கு எதிராகப் போராடிவரும் சவால்மிக்க இந்தக் கால கட்டத்தில், சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு பொறுமைகாக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திரு இயோங் கூறினார்.

