குடும்ப வன்செயல் பணிக்குழு பரிந்துரை; திருமண ஆயத்த செயல்திட்டங்கள் மேம்பாடு
குடும்ப பிரச்சினைகளைச் சிறந்த முறையில் கையாளுவதற்குத் தோதாக மேம்பட்ட திருமண ஆயத்த செயல்திட்டங்கள் நடப்புக்கு வருகின்றன.
திருமண வாழ்வில் பல தடைகளை எதிர்நோக்கும் தம்பதிகளுக்கு அத்திட்டங்கள் மூலம் மேலும் அதிக உதவிகள் கிடைக்கவிருக்கின்றன.
21 வயதை எட்டாத நிலையில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு உள்ள தம்பதிகளுக்கும் அந்த உதவிகள் கிடைக்கும்.
குடும்ப வன்செயல் பற்றிய சிறப்புப் பணிக்குழு நேற்று தன்னுடைய பரிந்துரை அறிக்கையை வெளி யிட்டது. குடும்ப வன்செயல்களுக்கு அதிகம் ஆளாகக்கூடிய ஆபத்து உள்ள இளம் தம்பதியருக்கான திருமண ஆயத்த செயல்திட்டங்களில் பல மாற்றங்களை அந்தக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
இது பற்றி ஊடகத்திற்கு விளக்கம் அளித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், முன்னதாகவே திருமணம் செய்துகொள்கிற, அவ்வளவாக வசதி இல்லாத தம்பதிகள் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்து இருப்பதாகக் கூறினார். அவர்கள் இத்தகைய திருமண ஆயத்த செயல்திட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திருமண ஆயத்த செயல்திட்டம் திருத்தப்பட்டு இருக்கிறது என்று அந்தப் பணிக்குழு அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
சிறார் பருவ கசப்பான அனுபவங்கள், அவற்றின் விளைவாக உறவுகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், தங்கள் உறவு பற்றி தம்பதியர் செய்யும் மதிப்பீடு, திருமண வாழ்வில் தம்பதியருக்கு ஆதரவு அளிக்க மேலும் வளங்கள் போன்ற பலவும் மேம்பட்ட செயல்திட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
அமைச்சின் குடும்ப வன்செயலுக்கு எதிரான 'மௌனத்தை களையுங்கள்' என்ற பொது விழிப்புணர்வு இயக்கத்தைக் காலத்திற்கேற்ப மாற்றவேண்டும் என்றும் குழு பரிந்துரைத்து இருக்கிறது.

