குடும்ப வன்செயலில் ஈடுபட்டு கொடுமைப்படுத்துவோர் மறுவாழ்வு பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் புதிய சட்டங்களைச் சிறப்புப் பணிக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.
தங்கள் அன்பரைக் கொடுமைப்படுத்துவோர் ஆலோசனை வழங்கப்படும் வகுப்புகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் அவர்களில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினர் அப்படிச் செய்வதில்லை.
எனினும் விரைவில் இதை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படலாம்.
குடும்ப வன்செயல் பற்றிய சிறப்புப் பணிக்குழு நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது.
அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
ஆலோசனை பெற வேண்டும் என்று கோரப்படும் உத்தரவுகளை மீறுவதை ஒரு குற்றமாக ஆக்குவது, கட்டாய மதிப்பீடு மற்றும் சிகிச்சை உத்தரவுகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
பாதிக்கப்படக்கூடியவர் அடிக்கடி செல்லும் இடத்திற்குள் சென்று குறிப்பிட்ட நேரம் காத்திருக்கக்கூடாது; அவரை நேரே சென்று பார்க்கக்கூடாது;
அவருடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை யாராவது மீறி நடந்தால் அதை கைது செய்யத்தக்க குற்றமாக அரசாங்கம் ஆக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைக்கிறது.
இப்படிப்பட்ட உத்தரவுகளை மீறி நடப்பதை ஒரு குற்றமாக ஆக்கினால், அதிகாரிகள் உடனடி அம லாக்க நடவடிக்கைகளை எடுத்து வன்செயல்கள் அதிகரிப்பதைத் தடுத்துவிட முடியும்.
கட்டாய மதிப்பீட்டு, சிகிச்சை உத்தரவுகளைப் பிறப்பிக்க நீதிமன்றங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் சிறப்புப் பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது.
பாதக செயல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட, தங்கி சிகிச்சை பெறுகின்ற ஒரு செயல்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராயவேண்டு என்பதும் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று.

