முன்கள போலிஸ் அதிகாரிகள் பயனடையும் வகையில் தங்ளின் போலிஸ் பிரிவில் புதிய நவீன பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரேனும் வீட்டில் சிக்கியிருப்பது, தற்கொலை முயற்சி, சந்தேகம் தரும் பொட்டலம் பொது இடத்தில் காணப்படுவது போன்ற அவசரமாக கவனிக்கவேண்டிய சூழல்களில் எப்படி செயல்படுவது என்பதை அதிகாரிகள் பாவனை பயிற்சிகளின் மூலம் கற்றுக்கொள்வர்.
புதிய நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதியன்று தொடங்கப்பட்டது. ஏற்கெனவே சுமார் மூவாண்டுகளுக்கு முன் சுவா சூ காங் உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தில் இதுபோன்ற பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவது, வெவ்வேறு பிரிவுகள் ஒன்றுசேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பெரிய அளவிலான பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள அதிகாரிகளுக்குப் பயிற்சியளிப்பதில் நிலையம் கவனம் செலுத்தி வருகிறது.
இதன் தொடர்பில் முன்கள அதிகாரிகளையும் உள்ளடக்கும் பயிற்சிகளை புதிய நிலையம் நடத்துகிறது.
பயிற்சிகளின்போது அதிகாரிகள் வெவ்வேறு அறைகளில் இருப்பர். உண்மையான நெருக்கடிச் சூழல் போலவே சம்பவங்கள் மெய்நிகர் வடிவில் திரையிடப்படும். தொலைத்தொடர்பு முறையில் அதிகாரிகள் ஒருவருடன் ஒருவரைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கையாள்வர். நிலையத்தில் நடத்தப்படும் இதுபோன்ற பாவனை பயிற்சிகள், கணினி மெய்நிகர் விளையாட்டுகளைப் போலிருக்கும்.
ஒரு நேரத்தில் பல்வேறு உள்துறைக் குழுப் பிரிவுகளைச் சேர்ந்த 40 தலைவர்களும் அதிகாரிகளும் தங்ளின் போலிஸ் பிரிவு, உள்துறைக் குழு பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடமுடியும்.

