சிங்கப்பூரில் 50 முதல் 59 வரை வயதுள்ள மக்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். இப்போது அந்த வாய்ப்பு 60க்கும் குறைந்த வயதுள்ளவர்களுக்குக் கிடைக்கிறது.
இந்த வயதுப் பிரிவினருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் அல்லது சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் நேற்று சுட்டிக் காட்டியது.
இதன் காரணமாக இளையர்களுடன் ஒப்பிடுகையில் அந்த வயதுப் பிரிவினருக்குக் கடுமையான நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு என்று அமைச்சு குறிப்பிட்டது.
இந்த வயதுப் பிரிவினரில் பலர், இந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆகையால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி காலவோட்டத்தில் குறைந்திருக்கக்கூடும் என்று அமைச்சு விளக்கியது.
மக்களின் நோய் தடுப்பாற்றலை கூட்டினால் கடுமையான நோய்களுக்கு எதிரான உயர்நிலை பாதுகாப்பு தொடர்ந்து இருந்துவரும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசியை முற்றிலும் போட்டுக்கொண்டபின் குறைந்தபட்சம் ஆறு மாதம் கழித்து 50 முதல் 59 வரை வயதுள்ளவர்கள் கூடுதலாக ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர்கள் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
பூஸ்டர் தடுப்பூசி நீண்டகாலத்திற்குக் கடுமையான நோய்கள் தாக்காமல் அதிக பாதுகாப்பைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நிலவரப்படி 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 91,500 முதியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டிருந்தனர். ஏறத்தாழ 56% முதியவர்கள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை ஏற்கெனவே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்படுவோருக்கு குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு தொடர்பு பற்றி தெரிவிக்கப்படும்.
அவர்கள் தடுப்பூசி நிலையத்தில், பலதுறை மருந்தகத்தில் அல்லது பொது சுகாதார ஆயத்த மருந்தகங்களில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.