கொவிட்-19 அன்றாட தொற்று கூடுவதைச் சமாளிக்கும் வகையில் டான் டோக் செங் மருத்துவமனை தனது அவசர சிகிச்சை பிரிவை விரிவுபடுத்தி இருக்கிறது.
ஒரு கட்டடத்திற்குள் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் இடத்தில் முழுப் பாதுகாப்பு உடையுடன் மருத்துவமனை ஊழியர்கள் பணியாற்றி வருவதை காட்டும் ஒரு காணொளி ஃபேஸ்புக்கில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
"சமூகத்தில் தொற்று கூடுவதால் அவசர சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தப்படுகிறது. பரிசோதனைகளை நடத்த அதிக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
"கொவிட்-19 தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை இடம்பெறுகின்றன," என்று மருத்துவமனை பேச்சாளர் கூறியதாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. விரிவாக்கம் பற்றிய மேல் விவரங்களை அந்தப் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியை யார் பதிவேற்றியது என்பது தெரியவில்லை.
இந்த மருத்துவமனை இது பற்றி ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை தெரிவித்து இருந்தது. ஊழியர்கள் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டதைக் காட்டும் படத்தையும் அது வெளியிட்டு இருந்தது.
இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவ வாகனம் மூலமாகவும் நேரடியாகவும் கொவிட்-19 தொற்றியோரும் தொற்று சந்தேக நபர்களும் சென்ற வாரம் சிகிச்சைக்காக அதிக அளவில் வந்ததாக இந்த மருத்துவமனை ஞாயிறன்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
அவசர சிகிச்சை தேவைப்படாதவர்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும் தனியார் மருந்தகங்களை அல்லது பலதுறை மருந்தகத்தை நாடும்படி அது ஆலோசனை கூறியது.

