ஒரே நாளில் 1,504 பேருக்கு தொற்று; இருவர் மரணம்
சிங்கப்பூரில் வியாழக்கிழமை புதிதாக மொத்தம் 1,504 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 71 வயது மாதும் 93 வயது மாதும் கொரோனா காரணமாக மரண மடைந்துவிட்டனர். இவர்களையும் சேர்த்து கொவிட்-19 தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆகிவிட்டது. கொரோனா தலைகாட்டியது முதலே கிருமி தொற்றி யோரின் அன்றாட எண்ணிக்கை, கடந்த வியாழக்கிழமை தான் ஆக அதிகம்.
அன்று உள்ளூரில் தொற்றுக்கு ஆளானவர்களில் 1,218 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 273 பேர் ஊழியர் தங்கு விடுதிகளைச் சேர்ந்தவர்கள். 343 பேர் 60 வயதைக் கடந்த முதியவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
இதர 13 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வியாழக்கிழமை மரணமடைந்த இரு மாதர்களும் புற்று நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள்.
இவை ஒருபுறம் இருக்க, ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் மேபிள் பியர் பாலர் பள்ளியிலும் இரண்டு ஊழியர் தங்கு விடுதிகளிலும் தொற்றுக் குழுமம் தலைகாட்டியதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. 12க்கும் குறைந்த வயதுள்ள 86 சிறார்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் இந்த வயது சிறார் களிடையே புதிதாக கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 529 என்றும் அமைச்சு கூறியது.
யேல்-என்யுஎஸ் மூடல்:
துறைகள் ஆட்சேபக் கடிதம்
யேல்-என்யுஎஸ் கல்லூரி மூடப்படுவதை ஆட்சேபித்து அந்தக் கல்லூரியின் சில துறைகள் கடிதம் எழுதி இருக்கின்றன. கல்லூரியை மூடுவதால் அதன் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பின் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் உள்ள எல்லா பல்கலைக் கழகங்களும் பாதிக்கப்படும் என்று அவை குறிப்பிட்டன.
"இந்த முடிவைப் பொறுத்தவரை, எங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள இணைப்புத் திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், நன்கொடையாளர்கள் எல்லாரும் விடுத்துள்ள பகிரங்க அறிக்கை, அவர்களின் கவலை ஆகியவற்றை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்," என்று அந்தக் கடிதம் தெவித்துள்ளது.
அந்தக் கடிதம் கல்வி அமைச்சுக்கும் யேல்-என்யுஎஸ் அரசு நிர்வாக சபைக்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பொறுப்பாட்சியர் சபைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. யேல்-என்யுஎஸ் கல்லூரியைத் தேசிய பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கல்விமான்கள் செயல்திட்டத் துறையுடன் இணைக்க முடிவாகி உள்ளது.
சிறார்களிடையே தொற்று: பெற்றோர் கவலை
சிங்கப்பூரில் 12க்கும் குறைந்த வயதுள்ள சிறார்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரிப்பது குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இருந்தாலும்கூட பாலர் பள்ளிகள் துணைப்பாட வகுப்பு நிலையங்களில் மாணவர் வருகை வழக்கமாகவே இருந்து வருகிறது.
சிங்கப்பூரில் 12க்கும் குறைந்த வயதுள்ள சிறார் களுக்குத் தடுப்பூசி இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
தங்கள் பிள்ளைகள் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு அதனால் குடும்ப உறுப்பினர்களுக்கும் கிருமி பரவுவது கவலை தருகிறது என்றும் தான் பேசிய பெற்றோர் ஏழு பேர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நிலவரப்படி 88 சிறார்கள் மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்தனர். என்றாலும் அவர்களில் யாருக்கும் தீவிர சிகிச்சையோ உயிர்வாயு சிகிச்சையோ தேவைப்படவில்லை.

