ஆட்குறைப்பு செய்யப்பட்ட பேனசோனிக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) மின்னணுவியல், மின்சாரத் தொழிற்துறைகளின் ஐக்கிய ஊழியர் சங்கமும் ஆதரவளிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அந்த ஜப்பானிய நிறுவனம் தனது ஊழியர்களில் 700 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்று முன்தினம் அறிவித்தது. அது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்கு.
குளிர்சாதன 'கம்பிரசர்' சாதனத்தின் உற்பத்தி நடவடிக்கையை சிங்கப்பூரில் மூட அந்நிறுவனம் முடிவெடுத்ததால், ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பேனசோனிக் தனது தொழிற்சாலையை மூடவிருப்பது பற்றி அறிந்து தாம் கவலைப்பட்டதாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ குறிப்பிட்டிருந்தார்.
"கடந்த சுமார் 50 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வரும் பேனசோனிக் நிறுவனம், இதுவரை கால் பில்லியன் அளவிலான குளிர்சாதன கம்பிரசர் சாதனங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது," என்றும் திரு லீ சொன்னார்.
கடந்த 1989ஆம் ஆண்டில் உலக அளவில் தனது 100 மில்லியன் ஆவது குளிர்சாதன கம்பிரசர் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் குறிக்க கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் திரு லீ பங்கேற்றதை அவர் நினைவுகூர்ந்தார்.
அப்போது பேனசோனிக் உலகில் இரண்டாவது பெரிய குளிர்சாதன கம்பிரசர் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக இருந்தது.
"சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பயணித்த பேனசோனிக் நிறுவனத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டு உள் ளோம்," என்றும் பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பேனசோனிக் நிறுவனத்தின் குளிர்சாதன கம்பிரசர் சாதன உற்பத்தி ஆலை மூடப்பட்டாலும் அதன் உலகளாவிய தலைமையகமும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து சிங்கப்பூரில் இயங்கும் என்றும் திரு லீ கூறினார்.
"சிங்கப்பூர், குறிப்பாக பொருளியல் வளர்ச்சிக் கழகம், பேனசோனிக் போன்ற முதலீட்டாளர்களின் பங்களிப்பைப் பெரிதும் மதிக்கிறது.
"அந்நிறுவனத்துடனான பங்காளித்துவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும்," என்றும் திரு லீ தெரிவித்தார்.
இதற்கிடையே, பேனசோனிக் நிறுவனத்தின் ஆட்குறைப்பு பற்றி கருத்துரைத்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங், ஆட்குறைப்பு பணிக்குழுவும் இதர அரசாங்க அமைப்புகளும் வேலையிழந்த பேனசோனிக் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன என்றார்.
இதன் தொடர்பிலான ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், "தொழிலாளர் இயக்கத்துடன் வேலை வாய்ப்பு வேலை நியமனக் கழகம் (இ2ஐ) பாதிக்கப்பட்ட ஊழியர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றன.
"புதிய வேலை வாய்ப்புகளுடன் பாதிக்கப்பட்ட ஊழியர்களை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்தும் பேனசோனிக் நிறுவனத்துடன் அவ்விரு அமைப்புகள் பணியாற்றி வருகின்றன," என்றார் அமைச்சர்.
"வேலை தேடுவோர் எண்ணிக்கையைவிட காலியான வேலைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அண்மைய ஆய்வுகள் காட்டுவதைச் சுட்டிய டாக்டர் டான், "பாதிக்கப்பட்ட ஊழியர்களை விரைவில் புதிய வேலைகளில் அமர்த்த நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்றார்.

