$10,000 கள்ள நோட்டு ஒன்றைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் ஆடவர் ஒருவரும் மாதர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள வங்கி ஒன்றில் $10,000 கள்ள நோட்டு ஒன்றை ஊழியரிடம் அந்த ஆடவர் வழங்கியது பற்றி புதன்கிழமை தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.
அந்த நோட்டை வழங்கி, சில்லறை நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள ஊழியரிடம் அந்த ஆடவர் கோரிக்கை விடுத்தார். அது கள்ள நோட்டு என்பதைக் கண்டறிந்த அந்த ஊழியர், அதுகுறித்து போலிசுக்குத் தெரியப்படுத்தினார்.
வணிக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் அந்த 58 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 33, 37 வயதுடைய அந்த இரு மாதர்களும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அந்த $10,000 நோட்டு, ஒரு சிவப்பு பாக்கெட்டு, சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வழங்கபட்டதாகக் கூறப்படும் போலி ஆவணம் ஆகியவற்றை போலிஸ் பறிமுதல் செய்தது.