புதிய கட்டுப்பாடுகள்: கவனம் செலுத்தவேண்டிய அம்சங்கள்
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று கூடிவருவதால் நாளை முதல் அக்டோபர் 24 வரை சுமார் ஒருமாத காலத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.
சமூக ஒன்றுகூடல்களில் இருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதேபோல உணவு, பானக் கடைகளில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மட்டுமே சேர்ந்து சாப்பிட முடியும். உணவங்காடி கடைகளிலும் காப்பிக் கடைகளிலும் தடுப்பூசி போட்டவர்களும் போடாத வர்களும் இருவர் வரை சேர்ந்து சாப்பிடலாம்.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறை ஒரு மாத காலத்திற்கு இயல்பான ஒன்றாக இருக்கும். வேலை இடத்திற்கு ஊழியர்கள் வரவேண்டி இருந்தால், முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நேரத்தை தொடர்ந்து ஏற்பாடு செய்து தரவேண்டும்.
தொடக்கப்பள்ளி, சிறப்பு கல்வி பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அக்டோபர் 7ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பாடங்களைப் படிப்பார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் 50 முதல் 59 வரை வயது உள்ளவர்கள், அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைக்கப்படுவார்கள்.
சனிக்கிழமை முதல் எட்டு வட்டார கொவிட்-19 பரிசோதனை நிலையங்களும் மூன்று அதிவேக பரிசோதனை நிலையங்களும் வார முடிவு நாட்களில் செயல்படும். முன்பதிவு மூலம் இவற்றில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
டாக்சி, வாடகை கார்களில் ஒரு நேரத்தில் சேர்ந்து செல்லக்கூடிய பயணிகளுக்கான வரம்பு இரண்டாக இருக்கும். பலரும் சேர்ந்து வாடகை கார்களில் செல்லும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
கொவிட்-19 நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அடிக்கடி சென்று வந்த இடங்களைக் காட்டும் ஒரு வரைபடத்தை சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் அக்டோபர் 1 முதல் வெளியிடும்.
அரசாங்கம், வேலை ஆதரவுத் திட்டம் மூலம் கிடைக்கும் உதவியை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரைப்பட்ட காலத்திற்கு கால்வாசி அதிகரிக்கும். அந்த உதவி $650 மில்லியன் அளவிற்கு இருக்கும்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியோர் சமய நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இரு பயணிகளுக்குமேல் டாக்சியில் ஏற்றக்கூடாது
டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் இரு பயணிகளை மட்டும் அனுமதிக்கும் நடைமுறை நாளை முதல் மீண்டும் நடப்பிற்கு வருகிறது.
இந்த இரு பயணிகள் வரம்பு, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பயணம் செய்யும்போதுதான் பொருந்தும். ஒரே குடும்பத்தினர் எனில், எடுத்துக்காட்டாக பெற்றோர் ஒருவர், குழந்தைகள் இருவர் என மூவர் இருந்தால், அவர்கள் ஒரே காரில் பயணம் செய்ய அனுமதியுண்டு.
அதே வேளையில், 'கிராப்ஹிட்ச்', 'ரைட்பூல்' உள்ளிட்ட கார் பகிர்வுச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என கட்டணம் சாராத கார் பகிர்வுப் பயணங்கள், அதிகபட்சம் இரு பயணிகள் என்ற விதிமுறையுடன் அனுமதிக்கப்படும்.
பயணம் செய்யும்போது கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கிலும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தோர்க்கு இடையிலான கலந்துற வாடலைக் குறைக்கும் விதமாகவும் இந்நடவடிக்கை இடம்பெறுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பயணத்தின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணியாதவர்களை டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ஏற்ற வேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
சிங்கப்பூரில் அன்றாட கிருமி பாதிப்பு 1,500ஐத் தாண்டிவிட்ட நிலையில், கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று முன்தினம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, சமூக ஒன்றுகூடல்களில் இருவர்க்குமேல் இடம்பெற முடியாது.

