உணவு, பானக் கடைகளை நடத்துவோருக்கான பாதுகாப்பு நிபந்தனைகளில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதனால் அந்தத் துறைக்கு தொழில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது என்று முதலாளிகளும் ஊழியர்களும் சங்கங்களும் தெரிவிக்கின்றன.
பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வர போதிய ஊழியர்களை ஒதுக்குவது, பொருட்களைக் கொள்முதல் செய்வது போன்ற பல சவால்களைத் தாங்கள் எதிர்நோக்குவதாக அந்தத் துறையைச் சேர்ந்த கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
அடிக்கடி கட்டுப்பாடுகள் மாறுவதால் வாடிக்கையாளர்கள் வருவது பாதிக்கப்படுகிறது என்று 'டிரிபேகா பார் அண்ட் பிஸ்ட்ரோ' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டெஸ்மண்ட் டான் கூறினார்.
பொருட்கள் வாங்குவதை கடைகள் குறைப்பதால் உணவுப் பொருள் வழங்கீட்டாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் அவர். தொழிலை பாதிக்கக்கூடிய அளவில் கட்டுப்பாடுகள் மாறி மாறி இடம்பெறும் பட்சத்தில் வரும் மாதங்களில் கடைகள் மூடப்படலாம்.
வேலை இழப்பு ஏற்படலாம் என்று இந்தத் துறையைச் சேர்ந்த வர்த்தக சங்கங்கள் எச்சரித்தன.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் அரசாங்கம் அளிக்கும் உதவிகள் காரணமாக ஓரளவுக்கு குறைந்து உள்ளன என்றும் சங்கங்கள் தெரி வித்தன.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இருவர், இருவராக மட்டுமே உணவகங்களில் சேர்ந்து சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு நாளை முதல் அக்டோபர் 24 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கு முந்தைய விதிமுறைகள் காரணமாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அறவே இல்லாத நிலை இருந்தது.
இப்படி கட்டுப்பாடுகள் மாறி மாறி வருவதால் உணவு, பானத் துறையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் பேச்சாளர் கூறினார்.