தேசிய பூங்கா வாரியம், புலாவ் உபினில் இயற்கை அடிப்படையிலான இரண்டு கடற்கரை பாதுகாப்பு திட்டங்களை அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
புலாவ் உபின் தீவின் வடக்கிலும் தெற்கிலும் கடல் அலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்டு இருக்கும் மண் அரிப்புகளை நீக்கி, எதிர்காலத்தில் கடல் மட்டம் உயரும்போது அதன் காரணமாக அந்தப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த இந்தத் திட்டங்கள் உதவும்.
புலாவ் தெக்கோங், கிராஞ்சி ஆகியவற்றில் இந்த வாரியம் வெற்றிகரமான முறையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து புலாவ் உபினில் இரு திட்டங்கள் நடப்புக்கு வருகின்றன.தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இதனை அறிவித்தார். இந்த வாரியத்தின் வருடாந்திர உயிரியல் பன்மய விழாவில் அவர் பேசினார்.
புலாவ் உபினில் இரண்டு புதிய கடற்கரை பாதுகாப்பு திட்டங்கள் தொடங்கப்படும். சமூகத்தின் பங்காளித்துவ உறவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் பூமலையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார். அந்தத் திட்டங்கள், அந்தத் தீவின் கடற்கரைகளைப் பாதுகாக்கும். ஊசியிலைக்காட்டு தாவரங்களையும் பாதுகாக்கும். அந்தத் தீவின் உயிரியல் பன்மயத்தை மீட்டு பாதுகாக்கவும் அந்தத் திட்டங்கள் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.