சைனாடவுன் தங்குவிடுதி ஒன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 37 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
கோ சூன் கிம் எனப்படும் அவர், நேற்று முன்தினம் டெம்பள் ஸ்திரீட்டில் உள்ள 'எஸ் இன் சைனாடவுன்' தங்குவிடுதியில் கத்தியை ஏந்திய நிலையில் நால்வரிடம் $1,000 கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவரது கூட்டாளியான இங் சியேக் கியாங் ஏஞ்சலோ, 42, என்பவர் இன்னும் பிடிபடவில்லை.
கொள்ளைச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை பின்னிரவு 3.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் போலிஸ் தெரிவித்தது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் தாக்கப்படவில்லை.
ஐந்து மணி நேரத்தில் கோ சூன் கிம்மை தோ பாயோ லோரோங் 1ல் போலிசார் கைது செய்தனர்.
மத்திய போலிஸ் பிரிவும் தங்ளின் போலிஸ் பிரிவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் கோ, அங்கிருந்து விடுவிக்கப்பட்டதும் மத்திய போலிஸ் பிரிவில் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று கூறிய அறிக்கை, அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
இந்நிலையில் தப்பி ஓடிய இங் சியேக் கியாங் ஏஞ்சலோ பற்றி அறிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
குற்றவாளிக்கு தங்க இடம் கொடுப்பது கடுமையான குற்றம் என்றும் அக்குற்றத்திற்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்றவை விதிக்கப்படலாம் என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

