பொங்கோலின் எஸ்11 ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்த சுமார் 8,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திரு லட்சுமணன் முரளிதரன் மொழிபெயர்ப்பாளராகவும் சமாதானத்தை நிலைநாட்டுபவராகவும் பிறரது பிரச்சினைகளைப் பொறுமையுடன் கேட்பவராகவும் இருக்கிறார்.
கடந்தாண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று அந்த விடுதி முடக்கப்பட்டபோது, அந்தக் கட்டுமான ஊழியர் முன்வந்து உணவு விநியோகத்தில் உதவினார். ஊழியர்களுக்கும் அவர்கள் பேசும் மொழியை அறிந்திராத விடுதி நடத்துர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார்.
கடந்த 18 மாதங்களாக இவர், சம்பள தகராறுகளையும் வீட்டில் பிரச்சினைகளையும் நிர்வாகம் செய்ய சக ஊழியர்களுக்கு உதவி வருகிறார். அவர்களுக்காக ஆக அண்மை செய்திக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து வருகிறார்.
தற்போது அவர், ஊழியர்களுக்கு சமூக ஆதரவு அளிக்கும் தொண்டூழியக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்தக் குழுவில் சுமார் 1,200 ஊழியர்கள் உள்ளனர். 'பிரண்ட்ஸ் ஒஃப் ஏஸ்' என்ற பெயருடைய அந்தக் குழு, கடந்த மார்ச் மாதத்தின் வரவு செலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை மனிதவள அமைச்சு தொண்டூழியர்களாக சேர்த்து வருகிறது. இந்தக் குழு, கிட்டத்தட்ட 200,000 பேர் வரை (ஊழியர்களிலேயே 75 விழுக்காட்டினர்) சென்று சேர இயலும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்தத் தொண்டூழியர்கள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க முடியும்.

