சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் பாலம் ஒரு காலத்தில் அறக்கப் பறக்கக் காணப்பட்டது. ஆனால் இப்போது அது வெறிச்சோடிக் கிடப்பதைப் படங்களில் பார்க்கும்போது சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களது வேலையை இழந்தது நினைவுக்கு வருகிறது. மேலும் பலர், தங்களது குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் விட்டுப் பிரிந்து சிங்கப்பூரிலேயே தங்க வேண்டி சூழலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஆயினும், ஜோகூர் மாநில அரசு, சுயமாகவே தனது தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில் இயல்பு நிலையைப் போன்ற வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எல்லைப்பகுதி 18 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது முதல் சுமார் 100,000 மலேசியர்கள் சிங்கப்பூரிலேயே தங்கி வருகின்றனர்.
இமுபிளான் திட்டம் ஜூலையில் தொடங்கப்பட்டபோது ஒன்பது பேரில் ஒருவர்தான் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது பாதிக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. “அக்டோபர் மாதத்திற்குள் ஜோகூர் மக்களில் 80 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும் என்பதே எங்களது இலக்கு,” என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஹஸ்னி முகம்மது தெரிவித்தார்.
இரண்டு நாடுகளுமே கிருமிப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போதுதான் எல்லைத்திறப்பு சாத்தியமாகும் என்றனர் இரு நாட்டு அதிகாரிகள்.
ஜோகூர் மாநிலத்தில் சுமார் 500 ஓட்டல்கள் உள்ளன. ஜோகூர் பாரு மாவட்டத்தில் மட்டும் மாநிலத்தின் பாதி வர்த்தகங்கள் அமைந்துள்ளன.