கி. ஜனார்த்தனன்
எதிர்கால சமுதாயத்திற்குத் தங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே 23 வயது ஷஃபீகா, 21 வயது பிரவீன் இருவரதும் உயரிய குறிக்கோள்.
இவர்கள் இருவரும் 'எஸ்ஜி:டி' (SG:D) எனப்படும் சிங்கப்பூர் மின்னிலக்க கல்விமான் விருதை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றனர். சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) இவ்விருதை வழங்கியுள்ளது.
கடுமையான நிபந்தனைகள் ஏதுமின்றி, விரும்பிய நிறுவனத்தில் வேலை செய்யும் சுதந்திரத்தை இந்த மானிய விருது அளித்துள்ளது என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் தகவல் கட்டமைப்பு மாணவராக உள்ள ஷஃபீகா ரஹமா ஜக்கஃபர் ரஃபிக். இந்த மானிய விருதுக்குத் தகுதிபெற்றிருந்த முன்னாள் மாணவர்களையும் ஐஎம்டிஏ தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இளம் கல்விமான்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை இந்த விருது வழங்குவதாக தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பயிலும் பிரவீன் பாலசுப்ரமணியம் குறிப்பிட்டார்.
இந்த விருது தொடர்பில் மாணவர்கள் மூன்று சுற்று நேர்காணல்களில் பங்கேற்றதாக ஷஃபீகா கூறினார். மாணவரின் ஆர்வம், அவர் எவ்வாறு சமுதாயத்திற்குப் பங்களிக்கப் போகிறார் போன்ற அம்சங்கள் இந்த நேர்காணல்களில் ஆராயப்பட்டன.
ஏற்கெனவே, வேலை அனுபவப் பயிற்சியை (internship) மேற்கொண்டிருந்ததும் தங்களுக்குச் சாதகமாக அமைந்ததாக இரு இளையர்களும் தெரிவித்தனர்.
முன்னதாக ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியில் பயின்ற ஷஃபீகா, தாம் தொழில்நுட்பத் துறையில் இருப்பதாக நினைக்கவில்லை எனக் கூறினார்.
இத்துறையில் மேலும் அதிகப் பெண்கள் சேர்வது நல்லது என்பதை உணர்ந்தார். தமது பாடத்திட்டத்தில் தொழில்நுட்பம் மட்டுமின்றி வர்த்தகம் சார்ந்த திறன்களும் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்த ஷஃபீகா, பல்கலைக்கழகத்தின் தகவல் கட்டமைப்பு (Information Systems) பள்ளியில் சேர்ந்தார். முதல் இரண்டு ஆண்டுகளில் இயந்திரவியல் கற்றல் (machine learning), நிரலிடுதல் ஆகியவற்றிலும் பின்னர் தரவு ஆய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்களிலும் கவனம் செலுத்தினார்.
பிரவீன், சிறு வயது முதல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் காட்டி வருபவர். உயர்நிலைப் பள்ளியின் இயந்திரவியல் மன்றத்தில் ஈடுபட்டிருந்த அவர், சட்டத்துறைக்குப் பதிலாக கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
நண்பர்களுடன் இவர் சேர்ந்து உருவாக்கிய 'டிக் நிஞ்சா' (Tick.ninja) என்ற கற்றல் வள செயலியைக் கிட்டத்தட்ட 200,000 பயனீட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வமுள்ளவர்கள் அதில் தங்கள் திறன்களை ஆழமாக வளர்த்துக்கொள்வது முக்கியம். அதே சமயம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனும் முக்கியம் என்றார் ஷஃபீகா.
தனிமனிதர்கள், வர்த்தகங்கள், சமூக அமைப்புகள் எனத் தொழில்நுட்பத்தை நாடும் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட சவால்கள் இருப்பதால் அவர்களது பார்வையிலிருந்து சிந்திக்கக்கூடிய திறன் தேவை என்று விளக்கினார் பிரவீன்.
"தாங்கள் இதுவரை யோசித்திராத, தங்களுக்குச் சவால்மிக்கதாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை, அவர்கள் சார்பில் சிந்தித்திடும் கடமையுணர்வு தொழில்நுட்ப நிபுணர்களுக்குத் தேவை," என்றார் பிரவீன்.
கற்றதை எவ்வாறு பிறருக்கு நன்மை அளிக்கும் வகையில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

