கொவிட்-19 பரவல் சூழலில் ஏற்பட்டுள்ள கடுமையான ஊழியர் பற்றாக்குறை, கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் சிங்கப்பூர் கட்டுமானத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் கட்டுமானத் துறையைச் சேர்ந்த 1,538 நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Acra) தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. ஆனாலும், கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் நீடித்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வருவது குறைந்துபோனது. அதனால் மனிதவளச் செலவுகள் கூடிவிட்டன; கட்டுமானத் திட்டங்களும் தாமதமடைந்துள்ளன.
கடந்த ஆண்டில் கட்டுமானத் துறையைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 52,800 குறைந்துபோனது. 2020 டிசம்பர் 31 நிலவரப்படி, சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் 288,700 வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் இந்தியா, பங்ளாதேஷ் நாட்டினர். சீனா, மியன்மார், மற்ற பிற நாடுகளில் இருந்தும் அத்துறையில் வேலை செய்கின்றனர்.
“இப்போது இந்திய அல்லது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவரை சிங்கப்பூர் அழைத்துவர $5,000 முதல் $6,000 வரையும் சீன ஊழியர் ஒருவரை அழைத்துவர $3,000 முதல் $4,000 வரையும் செலவாகிறது. கொரோனா பரவலுக்குமுன் இந்தச் செலவு 1,000 வெள்ளிக்கும் குறைவாகவே இருந்தது,” என்கிறார் கட்டுமான ஒப்பந்ததாரரான சூ ஸான் ருய்.
கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட முடக்கநிலைகளால் தொழிற்சாலை உற்பத்தி பாதித்து, அதனால் கட்டுமானப் பொருள்களின் விலையும் அவற்றைக் கொண்டு வருவதற்கான சரக்குக் கட்டணங்களும் அதிகரித்துவிட்டன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, முறுக்குக் கம்பி விலை 54 விழுக்காடும் அலுமினிய விலை 59 விழுக்காடும் செம்பு விலை 81 விழுக்காடும் கற்காரை (கான்கிரீட்) விலை 20 விழுக்காட்டிற்கு மேலும் கூடிவிட்டதாக சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்தது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 4.3% வளர்ச்சி கண்ட கட்டுமானத் துறை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் 7.6% சுருங்கியது.
இருப்பினும், அரசாங்கத்தின் பல்வேறு உதவி நடவடிக்கைகளும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் இன்னும் பல நிறுவனங்கள் மூடப்படாமல் தடுக்க உதவின.
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அத்துறையில் புதிதாக 2,037 நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பது அத்துறை விரைவில் மீட்சி பெறும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.