'சாங்கி விமா நிலையம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்'
சாங்கி விமான நிலைய நடுவம் பழையபடி செழித்தொங்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த நிலையம் பரந்த அளவில் பொருளியலுக்குப் பலன் அளிக்கிறது. பல்வேறு நிறுவனங்களைப் பொறுத்த வரை தொழில், வணிக நடுவமாகவும் தலைமையகமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. இப்படி திகழ்வது, சாங்கி விமான நிலையம் பழைய நிலைக்கு மீள்வதைப் பொறுத்தே இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கொவிட்-19க்கு முந்தைய நிலைக்கு மீள்வதற்கான பாதை அவ்வளவு எளிமையானதாக இராது என்றாலும்கூட விமான நிலைய மீட்சி மிகவும் முக்கியமானது என்று அவர்கள் கருத்துக் கூறினர்.
2019 டிசம்பர் நிலவரப்படி சாங்கி விமான நிலையம் மொத்தம் 173 நகர்களுடன் தொடர்புகொண்டு இருந்தது. இந்த எண்ணிக்கை இப்போது 97 ஆகச் சுருங்கிவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் 64 விமான நிறுவனங்கள் மட்டுமே சாங்கியில் சேவையாற்றின.
நிலவரம் சென்ற ஆண்டைவிட இப்போது மேம்பட்டு இருக்கிறது என்றாலும் சாங்கி விமான நிலையம் பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட தூரம் செல்லவேண்டி இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
'இரு புதிய நிறுவனங்களின் விமானச் சேவை தொடக்கம்
கொவிட்-19 காரணமாக பெரும்பாலான எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. என்றாலும்கூட இந்த மாதம் சாங்கி விமான நிலையத்தில் புதிய இரண்டு நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்கின.
ஜப்பானை சேர்ந்த மலிவுக் கட்டண 'ஸிப்பேர் தோக்கியோ' என்ற நிறுவனத்தின் விமானம் செப்டம்பர் 7ஆம் தேதி சாங்கியில் தரையிறங்கியது.
அந்த விமானம், சிங்கப்பூருக்கும் தோக்கியோவின் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையில் வாரம் ஒரு சேவையை வழங்குகிறது.
'ஸ்டார்லக்ஸ்' என்ற தைவானிய நிறுவனத்தின் விமானம் முதல் தடவையாக செப்டம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூரில் தரையிறங்கியது. இந்தச் சேவை வாரம் இருமுறை இரு வழிகளிலும் இடம்பெறுகிறது.
1,939 பேருக்குத் தொற்று;
இருவர் மரணம்
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை 1,939 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இது புதிய உச்சமாக இருக்கிறது. கிருமித்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து ஆறாவது நாளாக 1,000ஐ கடந்து உள்ளது. கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் இரண்டு சிங்கப்பூரர்கள் உயிரிழந்தனர். இருவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத 97 மற்றும் 69 வயதுள்ள மூதாட்டிகள்.
முதல் மூதாட்டிக்கு உயர் ரத்தக் கொழுப்புப் பிரச்சினை இருந்தது. இரண்டாம் மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. இவர்களையும் சேர்த்து நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.
கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 1,536 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 398 பேரும் அடங்குவர். இவர்களுள் 417 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். எஞ்சிய ஐவர் வெளி நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். மருத்துவ மனைகளில் 1,203 பேர் சிகிச்சை பெற்றனர். 172 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 30 பேர் உள்ளனர். மிகவும் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களில் 168 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலைய புதிய தொற்றுக் குழுமம் பற்றியும் அமைச்சு அறிவித்தது. அதில் 64 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் ஊழியர்களும் வியாபாரிகளும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.