மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கடந்த வாரயிறுதியில் மேற்கொண்ட திடீர் சோதனைகளில் கிட்டத்தட்ட $328,000 மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றியதுடன், நான்கு பேரைக் கைதுசெய்துள்ளனர்.
பிடிபட்ட போதைப்பொருளில் 4,342 கிராம் ஹெராயினும் அடங்கும் என்றும் 2,070 போதைப் பொருள் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்துவதற்கு அது போதுமானது என்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்றைய அறிக்கையில் கூறியது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 45 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூர் ஆடவர்கள். அவர்களுடன் 37 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.
மொத்தம் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் 191 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 15 கிராம் கஞ்சா, 207 கிராம் அளவிலான எக்ஸ்டசி மாத்திரைகள், 142 எரிமின்-5 மாத்திரைகள், 10 எல்எஸ்டி முத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடந்த சனிக்கிழமை இரவு கேலாங்கில் உள்ள சிம்ஸ் அவென்யூவில் ஒரு வாகனத்தைத் தடுத்து, 45 வயது, 51 வயதுள்ள இரண்டு ஆடவர்களைக் கைது செய்ததுடன் காரிலிருந்து ஒரு கிலோவுக்கு மேற்பட்ட ஹெராயின் உட்பட பல போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். காலாங் அவென்யூவில் உள்ள ஒரு கிடங்கு, ரிவர் வேலியில் உள்ள கிம் யாம் ரோட்டில் ஓர் இடம், ஆங்கர்வேல் லேனில் உள்ள ஒரு வீடு ஆகியவற்றிலும் பின்னர் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கிம் யாம் ரோட்டில் நிரந்தரவாசி பெண் கைதானார்.
அத்துடன் சனிக்கிழமை மாலை பொங்கோலில் உள்ள சுமாங் வாக்கில் உள்ள வீட்டில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கதவைத் திறக்க வேண்டியதாயிற்று என்று அறிக்கை தெரிவித்தது.
அங்கு 2,392 கிராம் போதைப் பொருள் உள்ள எட்டுப் பொட்டலங்களும் மேலும் பல போதைப் பொருட்களும் பிடிபட்டதுடன் 57 வயது ஆடவர் கைதானார்.