சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ளவர்கள் தங்கள் கைப்பேசியின் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒருவருக்கு ஒருவர் உடனுடக்கு உடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையமும் பேங்க் நெகாரா மலேசியாவும் நேற்று கூட்டாக அதனை அறிவித்தன.
சிங்கப்பூரின் பேநவ் கட்டணமுறையும் மலேசியாவின் டுவெட்நவ் கட்டணமுறையும் கட்டம் கட்டமாக இணைக்கப்படுவதாக இரு மத்திய வங்கிகளும் கூறின.
இத்திட்டத்தில் பங்குபெறும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உடனுக்கு உடன் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். அதற்கு கைபேசி எண் இருந்தால் போதும்.
மேலும், இதில் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் நெட்ஸ் அல்லது மலேசியாவின் டுவெட்நவ் கியூஆர் குறியீடுகளை வருடி, கட்டணங்களைச் செலுத்தலாம்.
இரண்டு நாட்டுப் பயணிகளும் கட்டணம் செலுத்துவதை இத்திட்டம் எளிதாக்கும் என்று கருதப் படுகிறது.
பெருந்தொற்றுக்கு முன்னதாக, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 12 மில்லியன் பேர் பயணம் செய்தனர் என்றது அறிக்கை. தாய்லாந்து, இந்தியா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் ஏற்கெனவே இத்தகைய திட்டத்தை அறிவித்துள்ளது.