தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
கொவிட்-19 தடைகாப்பு உத்தரவின்கீழ் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வரும் மாணவர்கள், விரும்பினால் தேசிய தேர்வுகளை எழுதலாம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
அதனையடுத்து மாணவர்கள் நிறைவேற்ற வேண்டிய சில குறிப்பிட்ட கடுமையான நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
மாணவர்களுக்குத் தடைகாப்பு உத்தரவு விதிக்கப்பட்ட நாள் மதியம் 12 மணிக்குள் அவர்கள் பள்ளிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு தேர்வுக்கு முன்தினமும் மாலை ஆறு மணிக்கு, மாணவர்கள் ஏஆர்டி விரைவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தடைகாப்பு உத்தரவு விதிக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் வீட்டிற்கு 'செர்டிஸ்' அதிகாரிகள் வரும் வரை காத்திருந்து அவர்கள் வந்த பிறகுதான் 'பிசிஆர்' பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
'பிசிஆர்' பரிசோதனை முடிவுகள் வெளிவர குறைந்தது 24 மணி நேரமாவது ஆகும் என்றும் இதனால், முடிவுகள் வெளிவந்து குறைந்தது இரண்டு நாட்களுக்குப் பிறகே, மாணவர்களால் தேர்வு எழுத இயலும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
தேர்வு நாள் அன்று மாணவர்களுக்குத் தடைகாப்பு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டால், அவர்களால் அந்தத் தேர்வை எழுத முடியாது. ஆயினும், தங்கள் பள்ளி மூலம் சிறப்புப் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறப்புப் பரிசீலனையின்கீழ் மாணவர்கள், அந்தப் பாடத்தின் மற்ற தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பீடுகள், அப்பள்ளியைச் சார்ந்த அவ்வாண்டு தேசிய தேர்வெழுதும் ஒட்டுமொத்த மாணவர்களின் மதிப்பீடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.
மாணவர்களுக்குத் தேவைப்படும் 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகளை 'செர்டிஸ்' அதிகாரிகள் வழங்குவர் என்றும் 'பிசிஆர்' பரிசோதனை முடிவுகள் இணையம் வழி, 'ஹெல்த்ஹப்' செயலி வழி அல்லது குறுஞ்செய்தி வழி தெரிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.
'பிசிஆர்' பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டால் அன்று மாலை மாணவர்கள் 'ஏஆர்டி' பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். பின், 'ஏஆர்டி' பரிசோதனை முடிவைப் படம் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு நாளன்று மாணவர்கள் 'பிசிஆர்' பரிசோதனை முடிவையும் 'ஏஆர்டி' பரிசோதனை முடிவின் படத்தையும் காண்பிக்க வேண்டும்.
தடைகாப்பு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்ட மாணவர்கள் தொடந்து வீட்டில் 'ஏஆர்டி' பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
இதே நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குத் துணையாகச் செல்லலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அல்லது வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகஅறிக்கையில் விவரிக்கப்பட்டது.

