வருங்காலத்தில் உலகின் வெப்பத்தை அதிகரிக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தும் இலக்கைப் பல நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால் இலக்கை அடைய வகைசெய்யும் தெளிவான திட்டங்களை ஒருசில நிறுவனங்கள்தான் வரைந்திருப்பதாக உணவு, வேளாண் நிறுவனமான 'ஓலம் இன்டர்நேஷனல்' தலைமை நிர்வாகி சனி வர்கீஸ் 'ஈக்கோஸ்பெரிட்டி' மாநாட்டில் குறிப்பிட்டார்.
மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதைச் சொன்னார்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் அதன் தொடர்பில் வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி எந்த மாநாடும் ஆராய்வதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் விடுக்கும் அபாயங்களைக் கையாண்ட வண்ணம் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் சூழலிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் கடந்த ஈராண்டுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தை அறவே நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இத்தகைய இலக்குகளை அடைய நிறுவனங்கள் எடுக்கும் பாதையில் பல இடையூறுகள் இருப்பதைத் திரு வர்கீஸ் சுட்டினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் 'ஈக்கோஸ்பெரிட்டி' மாநாடு நேற்று தொடங்கியது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் தொடர்பிலான அம்சங்கள் மாநாட்டில் அலசி ஆராயப்படும்.

