பாய லேபாரில் ஆடவர் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு சுமார் ஒரு மணிக்கு நிகழ்ந்தது.
கண்ணாடி உடைக்கப்பட்ட வாகனத்திற்குச் சொந்தக்காரர் 'அமரோன் கார் பேட்டரீஸ்' நிறுவனத்தில் விளம்பர நிர்வாகியாக வேலை செய்யும் 27 வயது ஆடவர். வாகனத்தின் கண்ணாடியில் பெரிய துவாரம் இருப்பதைக் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்ததாக அவர் கூறினார். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் இதற்கு முன் தனக்கு நேர்ந்ததில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
வாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் கண்ணாடி உடைக்கப்பட்டது பதிவானது. 'சுபாரு' வாகனம் ஒன்று இந்த வாகனத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதும், அதிலிருந்து ஆடவர் ஒருவர் வெளியே வந்து கண்ணாடியை உடைத்ததும் கேமராவில் பதிவானது. ஆனால் ஆடவரின் உருவமும் சம்பவமும் தெளிவாகப் பதிவாகவில்லை.
சேதத்தைப் பார்க்கும்போது ஆடவர் கோடரியைப் பயன்படுத்தியிருப்பது போல் தெரிவதாக உடைக்கப்பட்ட வாகனத்தின் சொந்தக்காரர் கூறினார். தாக்கி யவருக்கு உள்நோக்கம் ஏதும் இல்லை எனத் தான் நம்புவதாகவும் அவர் உண்மையிலேயே வேறொருவருக்குக் குறிவைத்திருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலை சுமார் 8.20 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர். விசாரணை நடந்துவருகிறது.

