போலி தடுப்பூசி சான்றிதழைக் காட்டியவருக்குச் சிறை
கைபேசிச் செயலியைப் பயன்படுத்தி தமது சக ஊழியரின் தடுப்பூசி சான்றிதழை சீனாவைச் சேர்ந்த 30வயது ஷாங் ஷாவ்பெங் மாற்றியமைத்தார். மாற்றியமைக்கப்பட்ட சான்றிதழின் மின்னிலக்க வடிவத்தைக் கொண்டு ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 'டனுக்கி ரார்' உணவகத்திற்குள் ஷாங் நுழைய முயன்றார். ஷாங்குடைய தடுப்பூசி சான்றிதழின் இருந்த அடையாள எண்ணும் அவருடன் இருந்த ஒருவருடைய தடுப்பூசி சான்றிதழில் இருந்த அடையாள எண்ணும் ஒரே மாதிரி இருந்தன. சான்றிதழ் மாற்றியமைக்கப்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகித்த உணவக
ஊழியர்கள், அங்கிருந்து கிளம்புமாறு அவரிடம் கூறினர். அதற்குப் பிறகு அச்சம்பவம் குறித்து போலிசாரிடம் தகவல்
தெரிவிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷாங்கிற்கு நேற்று மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வகையான குற்றம் புரிந்து, தண்டனை வழங்கப்பட்ட முதல் நபர் இவரே.
நோய்த்தொற்று கட்டுப்பாடுகளை மீறிய நிறுவனங்களுக்கு அபராதம்
சீனப் பெருநாளுக்கு முந்தைய வார இறுதியில் ஓர் உணவகத்தில் 65 ஊழியர்கள் ஒன்றுகூடி, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறினர்.
'ஏசியா பைலிங் கோ' கட்டுமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்விருந்து நிகழ்ச்சி டர்ஃப் சிட்டியிலுள்ள 'ஆ யாட் சீஃபூட்' உணவகத்தில், பிப்ரவரி 6ஆம் தேதி நடந்தது.
நேற்று 'ஏசியா பைலிங்' நிறுவனத்துக்கும் 'ஆ யாட் எபலோன் ஃபாரம் ரெஸ்ட்டாரன்ட் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்திற்கும் தலா $6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

