புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, புக்கிட் பாஞ்சாங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) ஐந்து வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நான்கு ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்தக் கட்டுமானத் திட்டங்களின் முக்கிய ஒப்பந்ததாரர் 'கிரேட்எர்த் கட்டுமான நிறுவனம்' நொடித்துப்போனதே இதற்குக் காரணம்.
இத்திட்டங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய மேலும் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் தாமதமாகலாம். ஏறத்தாழ 3,000 வாடிக்கையாளர்கள் 2022ன் முதல் காலாண்டிலிருந்து 2023ன் மூன்றாம் காலாண்டுக்குள் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கலாம். 'டீம்பில்ட் எஞ்சினியரிங் ஆண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்', 'நியுகொன் பில்டர்ஸ்', 'வெல்டேக் கன்ஸ்ட்ரக்ஷன்', 'சிஇஎஸ் எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' ஆகிய நான்கு ஒப்பந்ததாரர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் அன்று பணியமர்த்தப்பட்டனர். ஐந்து தளங்களிலும் பணிகள் அடுத்த மாதத் தொடக்கத்தில் தொடரும்.
ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து அத்தளங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் உதவி கிட்டியபோதும், அந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்களைத் கிரேட்எர்த் நிறுவனத்தால் முடிக்க இயலவில்லை.
மேலும் இரண்டு பொதுத்திட்டங்களும் தாமதமடையக்கூடும். பல துணை ஒப்பந்தக்காரர்களும் கிரேட்எர்த் நிறுவனத்தால் செலுத்த முடியாத கட்டணங்களால் கணிசமான இழப்புகளைச் சந்திக்கக்கூடும். வீடு வாங்குவோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, கடந்த ஒரு மாத காலமாக கிரேட்எர்த் நிறுவனத்துடனும் 'பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்' உடனும் இணைந்து பணியாற்றி வருவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.