கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது திரு டென்னிஸ் தியோ போன்ற பார்வை குன்றியவர்களுக்குப் பெரும் போராட்டமாகவே உள்ளது.
60 வயதாகிய திரு தியோ, தமது மனைவியுடனும் இரு மகன்களுடனும் கேலாங்கில் வசித்து வருகிறார். அவர் வாரத்துக்கு இரு முறையாவது அவரது வீட்டிற்கு அருகிலுள்ள உணவு நிலையத்துக்கு மதிய உணவு சாப்பிடச் செல்வார்.
ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்ப மேலாளரான திரு தியோ, தம்மால் பாதுகாப்பு தூர இடைவெளி கருதி குறியிடப்பட்டுள்ள இருக்கைகள் எவை என்று அறிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.
"என் கையால் தடவிப்பார்த்தால்தான் நாற்காலியைச் சுற்றி வலையோ தடுப்பு நாடாவோ போட்டிருப்பதை என்னால் உணர முடியும். ஆனால், வேறுவிதமான குறியீடுகள் இடப்பட்டிருந்தால் அதை அறிந்துகொள்வது மிகவும் கடினம்," என்றார் திரு தியோ.
மேலும் சில வேளைகளில் தாம் சிரமப்படுவதைக் கண்டு நல்ல உள்ளங்கள் சில ஓடி வந்து உதவி செய்தாலும், சிலர் தவறான இருக்கையில் அமரும்போது தம்மைக் கடிந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
திரு தியோ, தமது 53 வயது வயதில் நச்சுணவு உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட மோசமான உடல்நலக் கோளாறு காரணமாகப் பார்வையிழக்க நேரிட்டது.
திரு தியோவுக்கு வலது கண்ணில் பார்வையில்லை. இடது கண்ணால் வடிவங்கள், நிழல்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.
தமது கழியையும் பேச்சுவழி இயங்கும் கைபேசிச் செயலிகளையும் பயன்படுத்தி அவரால் சுயமாக பயணிக்க முடியும்.
ஆனால் நோய்த்தொற்றுத் தொடங்கிய பின், பாதுகாப்பு விரைவுத் தகவல் குறியீடுகளை (கியூஆர் கோட்) பயன்படுத்தி வருகையைப் பதிவு செய்வது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பார்வையற்றவர்கள் சங்கம், பார்வைக் குன்றியவர் படும் சிரமங்களை அது அறியும் என்று கூறியுள்ளது.
மேலும், அரசாங்கம் இயலாதவர்கள் குறித்து நெகிழ்வுத்தன்மையுடைய வழிமுறைகளை பாதுகாப்பு இடைவெளி தூதர்களுக்கு வெளியிட்டுள்ளதாகவும் சங்கம் கூறியது.
பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளால் நெருங்கிவந்து தங்கள் கைகளைப் பார்வையற்றவர்கள் பற்றிக்கொள்ள அனுமதித்து உதவ மக்கள் தயங்குகின்றனர்.
மாறாக, பேச்சுவழி வழிகாட்ட முற்படுகின்றனர்.
இந்நிலையில், 'கியூஆர் கோடு'களை எல்லா கடைகளிலும் வலது பக்கத்தில் வைப்பது போன்ற சீராக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அரசாங்கம் ஆராயலாம் என்று உடற்குறையுள்ளோர் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மரிசா மெட்ஜரல்-மில்ஸ் கூறியுள்ளார்.
இதுபோன்ற சிரமங்களுக்கு ஆளாவோருக்கு உதவும் வகையில் பேரங்காடி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம் என்றும் டாக்டர் மரிசா பரிந்துரைத்தார்.