சிங்கப்பூரில் நீடித்து நிலைக்கக்கூடிய மீன் வளர்ப்புத் திட்டம், மேலும் ஒரு நிலையை எட்டிப் பிடிக்கவுள்ளது. உள்ளூர் மீன் பண்ணை நிறுவனமான 'பாரமுண்டி குரூப்', சிங்கப்பூர் இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்புடன் செய்து கொண்டுள்ள மைல்கல் பங்காளித்துவ ஒப்பந்தப்படி, சிங்கப்பூரில் பொறுப்புணர்வுமிக்க கடலுணவு உற்பத்தியை அதிகரிக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டது.
மீன் வளர்ப்பு மேம்பாட்டுப் பணித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைப்பு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கும். மீன் வளர்ப்புப் பொறுப்பாளர் மன்ற (ஏஎஸ்சி) சான்றளிப்பு நிலையை 'பாரமுண்டி குரூப்' அடைவதற்கான முக்கிய இலக்குகளை அமைப்பு வகுக்கும் என்று இரு பங்காளித் தரப்புகளும் நேற்று தெரிவித்தன. சுற்றுச்சூழல், சமூகம் என்ற இரு நிலைகளிலும் கடலுணவை வளர்ப்பதில் பொறுப்புணர்வு காட்டும் பண்ணைகள், மதிப்பிடப்பட்ட பின்னர் இந்த 'ஏஎஸ்சி' சான்றிதழ் வழங்கப்படும்.
புதிதாக ஒப்பந்தமாகியுள்ள திட்டம், லஸாரஸ் மற்றும் செயிண்ட் ஜான்ஸ் தீவுகளுக்கு இடைப்பட்ட பகுதியின் புதிய தளத்திலும் சிங்கப்பூரின் தென் நீரணையில் உள்ள 'பாரமுண்டி குரூப்' நிறுவனத்தின் ஆழ்கடல் மீன் பண்ணையிலும் அமைந்திடும்.
'பாரமுண்டி' மீன்வகையின் எதிர்காலத்துக்காக நீடித்து நிலைக்கக்கூடிய மீன் வளர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்து நடத்தியது 'பாரமுண்டி குரூப்' நிறுவனமே.
தலைசிறந்த மீன் வளர்ப்புச் செயல்முறைகள் கொண்டதற்காக ஆஸ்திரேலியாவில் 2016ஆம் ஆண்டிலும் சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டிலும் நான்கு நட்சத்திர விருது பெற்ற முதல் நிறுவனமும் அது என்று கூறப்பட்டது.
வர்த்தக ரீதியிலான மீன் வளர்ப்புத் திட்டத்தை சிங்கப்பூரின் தென் நீரிணைகளில் விரிவுபடுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்திட புதிய ஆய்வுக்குழுவை நியமித்துள்ள நிலையில், 'பாரமுண்டி குரூப்' நிறுவனத்தின் இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் இதுவரை நிறுவனம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், புருணை நாடுகளில் கிட்டத்தட்ட 2,200 டன் மீன்களை உற்பத்தி செய்துள்ளது. உரிமம் பெற்ற சிங்கப்பூரின் 110 கடல்சார் மீன் பண்ணைத் தளங்களில் 108 கடலோர மீன் பண்ணைகள் ஜோகூர் நீரிணையில் அமைந்துள்ளன.