உணவகங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றிலிருந்து பயன்படுத்தப்பட்ட காப்பித் தூளைச் சேகரித்து, அவற்றை வீட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான மரத்துண்டுகளாக்கும் நிறுவனம் 'ஏ1 என்வைரமண்ட்'. இவ்வாறு உணவுக் கழிவுக்குப் புதுப்பொலிவு தரும் 11 நிறுவனங்களுக்கு நேற்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'உணவு வள மதிப்பீட்டு விருது' வழங்கப்பட்டது.
'உணவு வள மதிப்பீடு' என்பது உணவுக் கழிவை மதிப்புடைய பொருட்களாக மாற்றுவதாகும். உணவுக் கழிவை உரம் அல்லது திரவச் சத்துகளாக மாற்றுவதற்குப் பதிலாக இத்தகைய முறை பலராலும் விரும்பப்படுகிறது. விருதுகளை தேசிய சுற்றுப்புற வாரியம் வழங்கியுள்ளது. 'ஏ1 என்வைரமண்ட்' அதன் செயல்முறைகளை விரிவுபடுத்திய பிறகு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் பலவகை வீட்டுப் பொருட்களை மரவேலை ஊழியர்கள் கூட்டணியில் உருவாக்கி விற்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவன இயக்குநர் லோ யென் லிங் தெரிவித்தார்.
நீர்ப்புகா, நீடித்தத்தன்மையுடைய துண்டுகள் உருவாக்கம், உள்ளூர் பண்ணைகளுக்கு உரம் ஆகியவற்றுக்கு இதுவரை 650 டன் காப்பித் தூளை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.
இதன் வழி அதிகமான மரங்கள் வெட்டப்படுவதையும் தவிர்க்க முடியும் என்றார் திருவாட்டி லோ.
'பார்லி' எனப்படும் வாற் கோதுமை தானியங்களை மாச்சத்து இல்லாத, நார்ச்சத்து அதிகமுள்ள நூடல் உணவாக மாற்றும் 'கொஸ்மோட்ஹெல்த்' நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்த நூடல் வகையை உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.
கடந்த ஆண்டில் மொத்த கழிவுப்பொருட்களில் உணவுக் கழிவு 11%. வீசப்பட்ட 665 மில்லியன் கிலோ உணவுக் கழிவில் 19% மட்டுமே மறுபயனீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

