ஆறு வயது, பத்து வயதான தமது மகள்களைத் துன்புறுத்தி, மூத்த மகளின் முன் பற்களை உடைத்த இல்லத்தரசிக்கு நேற்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வீட்டுக்கு வந்த கணவர் மக ளின் பற்கள் உடைந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவரை கேகே மகளிர் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமிகள் துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.
போலிசார் சம்பவத்தை விசாரித்த சமயத்திலும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நேரத்திலும் அந்த மாது தமது துன்புறுத்தலை நிறுத்தவில்லை.
மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காணொளி வழி தோன்றினார் அந்த 38 வயது மாது.
"தேவைப்பட்டால் பிள்ளை களைக் கண்டிக்கலாம். ஆனால் அதைப் பொருத்தமான வழியில் செய்யவும்," என்று நீதிபதி திரு கெஸ்லர் சோ நேற்று தண்டனையை விதிக்கும் முன்னர் மாதிடம் கூறினார். அந்த மாது கோபத்தை இனி பிள்ளைகளின் மீது காட்டமாட்டார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 16ம் தேதி, மகள்களைத் துன்புறுத்தியதன் தொடர்பிலான ஏழு குற்றச்சாட்டுகளை அந்த மாது ஒப்புக்கொண்டார். நேற்று மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறுமிகளைக் கருத்தில் கொண்டு மாதின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு மகனும் உள்ளார். ஆனால் மகனின் வயது நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
குற்றங்கள் நடந்தபோது மாதின் மனநிலை பாதிக்கப்படவில்லை என மனநலச் சோதனை காட்டியது.

