கடுமையாக நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் இரு மருந்துகளுடைய கலவை தடுப்பூசி
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், அதை எதிர்த்துப் போராட கொவிட்-19 நோயாளிகளுக்கு இன்னும் அதிகமான சிகிச்சைகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
இதில் ஆகக் கடைசியாகக் குறிப்பிடப்படுவது இரு மருந்துகளின் கலவையான கொவிட்-19 'ஆன்டிபாடி காக்டெய்ல்' தடுப்பூசி. இந்த மருந்தை ரீஜெனரோன் அண்ட் ரோச் (Regeneron and Roch) நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன.
இந்தத் தடுப்பூசி மருந்து இம்மாதம் சிங்கப்பூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தொற்றுநோய்களுக்கான தடுப்பு நிலையம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தக் கலவை தடுப்பூசி, நோயால் மிதமாகப் பாதிக்கப்பட்டு, அதேவேளையில் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும்.
இந்த மருந்து, பெருந்தொற்று சிறப்பு அனுமதிப் பாதை மூலம் சிங்கப்பூரில் பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் இடைக்கால அங்கீகாரத்தைக் கடந்த மாதம் 21ஆம் தேதி வழங்கியது.
உயிர்வாயு சிகிச்சை தேவைப்படாத, கடுமையான கொவிட்-19 பாதிப்படையக்கூடிய 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரிடம் இந்த மருந்தைக் கொண்டு, சிகிச்சை மேற்கொள்ள தொற்றுநோய் நிபுணர்களால் முடியும்.
சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்ட மூன்று கட்ட ஆய்வின்படி, இந்த 'ஆன்டிபாடி காக்டெய்ல்' தடுப்பூசி மருந்து, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்கு இட்டுச் செல்லும் அபாயக் கட்டத்தையும் அல்லது மரணத்தையும் 70% குறைக்கும் ஆற்றல் பெற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நோய்க்கான அறிகுறியும் முன்பைவிட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும்.
கடந்த மாதம் 24ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனக் குழு ஒன்று, இந்தக் கலவை மருந்தைக் கொண்டு, ஆன்டிபாடிகள் அறவே இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையைத் தவிர்க்கப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த 'ஆன்டிபாடி காக்டெய்ல்' தடுப்பூசி சிகிச்சைக்கு, அவசரநிலைக்குப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அவசரநிலைத் துறை கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு முன்னைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த மருந்தைக் கொண்ட சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த மருந்தைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது.
இந்த சிகிச்சைக்கு பிரிட்டன் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. தற்போது ஐரோப்பா இந்தத் தடுப்பூசி சிகிச்சையைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
இந்த 'ஆன்டிபாடி காக்டெய்ல்' தடுப்பூசி மருந்தைத் தவிர மேலும் நான்கு வகை மருந்துகள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.