மின்சாரக் கட்டணமும் எரிவாயு கட்டணமும், இன்று முதல் வரும் டிசம்பர் 31 வரை உயரவிருக்கிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுடன் ஒப்புநோக்க, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.2% விழுக்காடு உயர்ந்துள்ளது. எஸ்பி குழுமம் நேற்று இதனைத் தெரிவித்தது.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரிபொருளின் விலை கூடியுள்ளதே மின்சார விலை உயர்ந்ததற்கான காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது.
ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு மின்சாரக் கட்டணம் 23.38 காசிலிருந்து 24.11 காசாக உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பாக). கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்குப் பிறகு, மின்சாரக் கட்டணம் இந்த அளவு கூடியது இதுவே முதன்முறை.
இதன் மூலம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக நான்கறை வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு $2.49 உயரும் என்றது எஸ்பி குழுமம்.
எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல் களின் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களை எஸ்பி குழுமம் மறுஆய்வு செய்து வருகிறது.
எரிவாயுக் கட்டணமும் உயர்வு
வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணம் இந்தக் காலாண்டில், ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.57 காசு உயரும் என்று சிட்டிகேஸ் நிறுவனம் நேற்று கூறியது.
அதாவது எரிவாயுக் கட்டணம், ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 18.47 காசிலிருந்து 19.04 காசாக உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பாக).